Published : 02 Nov 2021 12:31 PM
Last Updated : 02 Nov 2021 12:31 PM

மிக உயரிய இடத்துக்குச் சென்றாலும் விஜய்யின் பணிவு மாறவில்லை: இயக்குநர் வம்சி புகழாரம்

தமிழ் சினிமாவின் மிக உயரிய இடத்துக்குச் சென்றுவிட்டாலும் விஜய்யின் பணிவு மாறவில்லை என்று இயக்குநர் வம்சி புகழாரம் சூட்டியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'பீஸ்ட்' படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இதில் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வம்சி அளித்த பேட்டியில் ‘தளபதி 66’ படம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

''என்னுடைய மிகப்பெரிய பலமே மனித உறவுகளும், உணர்வுகளும்தான். எனவே விஜய்யை வைத்து நான் இயக்கும் படத்தில் இந்த இரண்டு காரணிகளும் நிச்சயம் இருக்கும். விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தையும் அவரது ரசிகர்களையும் மனதில் கொண்டு நான் இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்.

படம் குறித்த அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் முதல் வெளிவரும். படத்தின் கதையையும் எழுதி முடித்துவிட்டோம். இந்த ஆண்டின் இறுதியில் எங்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

விஜய் தமிழ் சினிமாவின் மிக உயரிய இடத்துக்குச் சென்றுவிட்டாலும் அவருடைய பணிவு மாறவில்லை. அவரைப் பொறுத்தவரை இயக்குநருடன் எந்தவித சங்கடமும் இல்லாமல் இருப்பதே ஒரு படத்தைத் தொடங்குவதற்கான முக்கிய அளவுகோல்''.

இவ்வாறு வம்சி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x