Published : 30 Oct 2021 12:39 PM
Last Updated : 30 Oct 2021 12:39 PM

விமர்சகர்களுக்கு விஷால் வேண்டுகோள்

சென்னை

'எனிமி' பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் விஷால்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், கருணாகரன், மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனிமி'. வினோத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், பின்னணி இசையமைப்பாளராக சாம் சி.எஸ், கலை இயக்குநராக ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை விளம்பரப்படுத்தப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இந்தச் சந்திப்பில் விஷால் பேசியதாவது:

"எனது நல்ல நண்பர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் என்னால் அந்தச் செய்தியை நம்ப முடியவில்லை. அவருடைய குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'எனிமி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு சந்தோஷமாகப் போகிறேன் என்றால் அதற்கு இந்தத் தயாரிப்பாளர் வினோத்குமார்தான் காரணம். அவர் பணத்தை மனதில் வைத்துப் படத்தைத் தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்தப் படத்தை ஓடிடிக்குப் பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால், ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமெனப் படத்தை தியேட்டருக்குக் கொண்டுவந்ததற்கே அவரை வணங்க வேண்டும். அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன்.

ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக் கதையில் ஆர்யா இருந்தால் நன்றாக இருக்கும், அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனைதான் இந்தப்படம். "ஆர்யாவிடம்.. உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்துவிட்டு வருகிறேன்" என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார். இப்போது என்னவென்று தெரியவில்லை திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்தப் படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும்போது, அப்போதுதான் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்துவிட்டார். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பின்போது, மருத்துவர் மற்றும் நர்ஸ் கூடவே இருப்பார்கள். நான் அல்லது ஆர்யா இருவரில் ஒருவர் சென்றுகொண்டே இருப்போம். அவ்வளவு அடிபடும். ஏற்கெனவே அவருடன் 'அவன் இவன்' படத்தில் நடித்திருக்கிறேன். மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கக் காத்திருக்கிறேன்.

இதற்கு மேல் படம் பேசும் என எதிர்பார்க்கிறேன். அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது. படம் சரியில்லை, வழக்கமான படம்தான் என்பன உள்ளிட்ட தேவையற்ற விமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை. நிறைய பேர் 'டைட்டானிக்' படத்தில் மனோரமா சரியாக நடிக்கவில்லை என்று சொல்வார்கள். அதில் அவர் நடித்திருக்கவே மாட்டார். அந்த மாதிரி சிலர் இருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலையில்லை.

விமர்சகர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு படத்தின் விமர்சனத்துக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள். ஏனென்றால் ஒரு படத்தில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. ஒரு விமர்சனம் என்பது திரையரங்கிற்குச் செல்லும் நபரைத் தடுக்கக் கூடாது. சிலர் விமர்சனத்துக்காகவே படத்துக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். கரோனா அச்சுறுத்தலுக்குப் பின் மீண்டும் திரையரங்கிற்கு மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். ஆகையால் விமர்சனத்துக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள்".

இவ்வாறு விஷால் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x