Published : 26 Oct 2021 04:58 PM
Last Updated : 26 Oct 2021 04:58 PM

ஓடிடியில் வெளியாகிறது 'மாறன்'?

சென்னை

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'மாறன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாறன்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு, படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாகப் படங்கள் வெளியாகி வரும் சூழலில், பல்வேறு படங்கள் தேதி கிடைக்காத காரணத்தால் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

இதனிடையே, 'மாறன்' படத்தையும் ஓடிடியில் வெளியிடலாம் என்று தயாரிப்புத் தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கல் வெளியீடாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப் பெரும் தொகைக்குப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாகப் படக்குழுவினர் அமைதி காத்து வருவதால், இது உண்மையாக இருக்கும் எனப் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். முன்னதாக, 'ஜகமே தந்திரம்' ஓடிடியில் வெளியீடு என்று முடிவானபோது தனுஷ் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். தற்போது மற்றொரு படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதால், தனுஷ் என்ன சொல்லப் போகிறார் என்பது விரைவில் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x