

இசையோடு இசைந்திருப்பதே என்னுடைய இலக்கு என்று இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார்.
67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று (அக்.25) நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது, விஜய் சேதுபதிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது, 'ஒத்த செருப்பு' படத்துக்காக பார்த்திபனுக்கு சிறந்த நடுவர் தேர்வு விருது, ’கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, ’விஸ்வாசம்’ படத்துக்காக இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது ஆகியவையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இசையமைப்பாளர் இமான் கூறியவதாவது:
இந்த நிகழ்ச்சி இணைய வாயிலாகவே நடந்து முடிந்துவிடுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் சூழலை இலகுவாக மாற்றி அனைவரையும் நேரில் வந்து விருது பெறும் நிலையை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ரஜினி சார் விருது பெறும் அதே மேடையில் நானும் விருது பெறுவது கூடுதல் மகிழ்ச்சி.
நான் விருது பெறுவதை அவர் பார்த்து மகிழ்ந்ததும், அவர் விருது பெறுவதை நான் பார்ப்பதும் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். ஏறக்குறைய 25 ஆண்டுகளாக இசைத் துறையில் இருக்கிறேன். இசைதான் எனக்கு எல்லாமே. இசையோடு இசைந்திருப்பதே என்னுடைய இலக்கு. எனது பயணம் விருதை நோக்கியது இல்ல.
இவ்வாறு இமான் பேசினார்.