Published : 24 Oct 2021 03:27 PM
Last Updated : 24 Oct 2021 03:27 PM

'மாஸ்டர் செஃப்' குழுவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை: தமன்னா முடிவு

சென்னை

'மாஸ்டர் செஃப்' குழுவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தமன்னா முடிவு செய்துள்ளார்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமையல் நிகழ்ச்சி 'மாஸ்டர் செஃப்'. இந்நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இதை தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்கி வந்தார்கள். திடீரென்று தெலுங்கில் தமன்னா நீக்கப்பட்டு அனுசுயா தொகுத்து வழங்கி வருகிறார்.

எதற்காக தமன்னா நீக்கப்பட்டார் என்ற தகவல் தெரியாமலேயே இருந்தது. தற்போது தமன்னாவின் வக்கீல் தரப்பு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

"'மாஸ்டர் செஃப்' தெலுங்கு பதிப்புக்கான சம்பள பாக்கி இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதாலும், தயாரிப்பு தரப்பான இன்னவேடிவ் ஃபிலிம் அகாடமியின் தொழில் முறையற்ற அணுகுமுறையாலும் தமன்னா சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தயாரிப்பு தரப்பு தொடர்ந்து சம்பளம் தராமல், தொழில் ரீதியாக ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றாலும் தமன்னா தனது மற்ற வேலைகளை ரத்து செய்துவிட்டு இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியை முடித்துத் தர வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்.

ஆனால் திடீரென்று தயாரிப்பு தரப்பு அவருடனான தொடர்பை நிறுத்திவிட்டது என்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தமன்னா தள்ளப்பட்டுள்ளார்"

இவ்வாறு தமன்னாவின் வக்கீல் தரப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x