Published : 14 Oct 2021 03:16 PM
Last Updated : 14 Oct 2021 03:16 PM

'கோடி கொப்பா 3' வெளியீட்டில் சிக்கல்; ரசிகர்கள் கொந்தளிப்பு: சுதீப் வேண்டுகோள்

பெங்களூரு

'கோடி கொப்பா 3' வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் கோபமடைந்து திரையரங்குகளைச் சேதப்படுத்தினர். ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று சுதீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவா கார்த்திக் இயக்கத்தில் சுதீப், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோடி கொப்பா 3'. கரோனா அச்சுறுத்தலால் நீண்ட நாட்களாக இந்தப் படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், இன்று (அக்டோபர் 14) வெளியாக இருந்தது.

2 ஆண்டுகள் கழித்து வெளியாகும் சுதீப் படம் என்பதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடத் திட்டமிட்டார்கள். ஆனால் தயாரிப்பாளர் - பைனான்சியர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் திட்டமிட்டபடி இன்று படம் வெளியாகவில்லை.

இதனால் திரையரங்கில் காத்திருந்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள். மேலும், சில இடங்களில் ரசிகர்கள் திரையரங்குகளைச் சேதப்படுத்தினார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

இது தொடர்பாக சுதீப் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

" 'கோடி கொப்பா 3' திரைப்படத்தின் வெளியீடு சம்பந்தமாக ஒரு கோரிக்கை. சில பிரச்சினைகளால் படத்தின் வெளியீடு தாமதமாகியிருக்கிறது. ஏற்கெனவே திரையரங்குகளில் இருக்கும் அனைவருக்கும் இதைத் தெரிவிப்பது என் கடமையாகும்.

சம்பந்தப்பட்டவர்களின் இந்த அலட்சியத்துக்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ரசிகர்கள் யாரும் தங்கள் அதிருப்தியைத் திரையரங்குகளில் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்களுக்கு இதில் தொடர்பில்லை.

இது ஒரு அரிய சூழல். நீங்கள் கொஞ்சம் பொறுமை காப்பது எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். நீண்ட இடைவேளைக்குப் பின் திரைப்படத்தைத் திரையரங்குக்குக் கொண்டுவர நானும் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தேன். எனக்குத் தெளிவான தகவல் கிடைத்தபின் பட வெளியீடு குறித்து ட்வீட் செய்கிறேன்.

அதுவரை நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். திரையரங்குகளுக்கும் எந்த சேதத்தையும் விளைவிக்காதீர்கள். என்னை நம்பி, என் மீது அன்பு செலுத்துபவர்கள் அனைவருக்கும் பதில் சொல்வதை என் தனிப்பட்ட கடமையாக நான் நினைப்பதால், மீண்டும் என் திரைப்படங்களின் வெளியீட்டில் இப்படி ஒரு குழப்பம் வராது என்பதைக் கண்டிப்பாக இனி உறுதி செய்வேன் என்று சத்தியம் செய்கிறேன்".

இவ்வாறு சுதீப் தெரிவித்துள்ளார்.

தற்போது 'கோடி கொப்பா 3' படத்தின் மீதான அனைத்துப் பிரச்சினைகளும் பேசித் தீர்க்கப்பட்டு, நாளை (அக்டோபர் 15) படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

— Kichcha Sudeepa (@KicchaSudeep) October 14, 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x