Published : 08 Oct 2021 03:12 AM
Last Updated : 08 Oct 2021 03:12 AM

உயிருக்கும் போராடும் ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். (அடுத்த படம்) விஜயவாடா மருத்துவமனையில், உயிருக்கு போராடும் தனது ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்ற காணொலி மூலம் பேசும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.

ஹைதராபாத்

சாலை விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது ரசிகரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவரது கடைசி ஆசையை பிரபலதெலுங்கு திரைப்பட நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். நிறைவேற்றி வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வைரல் ஆகி வருகிறது.

நாம் எவ்வளவோ ஆராதிக்கும் நமது திரைப்பட கதாநாயகர்களில் சிலர் நிஜ வாழ்க்கையிலும் மற்றவர்கள் பின்பற்றக்கூடிய வகையில் வாழ்ந்து காட்டி இருப்பார்கள். மேலும் சிலர், தங்களது ரசிகர்களை மதித்து நடந்து கொள்வார்கள். ரசிகர்களால்தான் நாம் எனும் அடிப்படை உண்மையை சிலர் மறவாமல் உள்ளனர் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் நடந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஆந்திராவிலும் நடந்துள்ளது. மறைந்த என்.டி.ராமாராவின் பேரனும், பிரபல தெலுங்கு திரைப்பட நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர். வெகு பிஸியான நடிகராவார்.

இவர் சமீபத்தில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜ்ஜுடன், இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 7-ம்தேதி உலகமெங்கும் வெளியாகஉள்ளது. இதனை தொடர்ந்துதெலுங்கில் ஒரு தொலைக்காட்சியில் இவர் தற்போது ‘யார் உங்களில் கோடீஸ்வரர்’ எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம்,கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜோலு பகுதியை சேர்ந்த முரளி எனும் வாலிபர், ஜூனியர் என்.டி.ஆரின் தீவிர ரசிகராவார். ஆனால், முரளி கடந்த வாரம்பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தற்போது விஜயவாடாவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இவரின் 2 சிறுநீரகங்களும் விபத்தில் செயலிழந்து போனது. ஐசியுவில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், முரளி, தான் உயிருடன் இருக்கும்போதே தனது அபிமான நடிகரான ஜூனியர் என்.டி.ஆரை பார்த்து பேச வேண்டும் என கோரிக்கையை மருத்துவர்கள் முன் வைத்துள்ளார். இது குறித்து தகவல்கள் வெளியாயின.

இதனை அறிந்த நடிகர் ஜூனியர்என்.டி.ஆர் நேற்று முரளியின் செல்போன் வாயிலாக காணொலி மூலம் பேசினார். தனது அபிமான நடிகர் தனக்கு போன் செய்து பேசுகிறார் என்பதை அறிந்தமுரளி, தான் பிறந்ததற்கான பிறவி பயனை அடைந்ததுபோல் உணர்ந்து மிகவும் ஆர்வமுடன் ஜூனியர் என்.டி.ஆருடன் கண்ணீர் விட்டு பேசினார். பயப்பட வேண்டாம். விரைவில் உடல் நலம் குணமாகி வீடு திரும்புவாய் என ஜூனியர் என்.டி.ஆர், முரளிக்கு தைரியத்தை ஊட்டும் வகையில் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x