Published : 02 Oct 2021 09:37 PM
Last Updated : 02 Oct 2021 09:37 PM

சமந்தா, சைதன்யாவுக்கு இடையே நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: நாகார்ஜுனா வேதனை

சமந்தாவுக்கும், சைதன்யாவுக்கு இடையே நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என சமந்தாவின் மாமனார் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சமந்தாவுக்கும், சைதன்யாவுக்கு இடையே நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நான் இதை மிகுந்த பாரமான மனத்துடன் தெரிவிக்கிறேன். ஒரு கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்கள் முற்றிலும் தனிப்பட்டவை.

சமந்தாவும், சைதன்யாவும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். சமந்தா இந்த வீட்டில் இருந்த நாட்களை, அவர் எங்களுடன் செலவழித்த நேரங்களை நாங்கள் எப்போதும் அன்புடன் நினைவுகூர்வோம். சமந்தா எப்போதும் எங்களுக்கு நெருக்கமானவராகத் தான் இருப்பார். இருவருக்கும் இறைவன் மன வலிமையைத் தரட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர்.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரும் நாகர்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில தினங்களாகவே நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஆனால் இருவருமே இது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடாமல் இருந்தனர்.

தற்போது முதன்முறையாக நாக சைதன்யா - சமந்தா இருவரும் கூட்டாக பிரிந்துவிட்டோம் என்று அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நாக சைதன்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் கூறியிருப்பதாவது:

"எங்களின் நலன் விரும்பிகளுக்கும் இதனைச் சொல்லிக் கொள்கிறோம்..

நீண்ட யோசனைக்குப் பின்னர், நானும் சமந்தாவும் கணவன், மனைவியாக தொடரப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் நட்பு இருந்தது. அதை நாங்கள் பெரும் பொக்கிஷமாகக் கருதுகிறோம். அந்த நட்புதான் எங்கள் உறவுக்கு அடிப்படை. இனியும் கூட, எங்களுக்குள் அந்த நட்பின் நிமித்தமான பிரத்யேக பிணைப்பு தொடரும்.

இந்தக் கடுமையான காலகட்டத்தில் நண்பர்கள், நலன் விரும்பிகள், ஊடகங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் தனிநபர் சுதந்திரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம். அனைவருக்கும் நன்றி."

இவ்வாறு நாக சைதன்யா தெரிவித்தார்.

தெலுங்கு திரையுலகில் நாக சைதன்யா - சமந்தா ஜோடி என்பது மிகவும் பிரபலம். தற்போது இந்த ஜோடி பிரிந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x