Published : 29 Sep 2021 04:41 PM
Last Updated : 29 Sep 2021 04:41 PM

இந்தப் படக்குழுவின் அடுத்த படத்தை மூன்று மடங்கு பட்ஜெட்டில் தயாரிக்கிறேன்: ஞானவேல் ராஜா

'பன்றிக்கு நன்றி சொல்லி' படக்குழுவின் அடுத்த படத்தை மூன்று மடங்கு பட்ஜெட்டில் தயாரிக்கிறேன் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

புதியவர்களின் கைவண்ணத்தில் ப்ளாக் ஹியூமர் வகையில் உருவாகியுள்ள படம் 'பன்றிக்கு நன்றி சொல்லி’. அறிமுக நடிகர் நிஷாந்த் நாயகனாக நடிக்க, சுரேன் விகாஷ் இசையமைக்க, விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவில் பாலா அரன் இயக்கியுள்ளார். விஜயன் இணைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

'பன்றிக்கு நன்றி சொல்லி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இயக்குநர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

தயாரிப்பாளர் சி.வி.குமார்:

'' 'அட்டகத்தி' எனக்கு மிகப்பெரிய பயணமாக இருந்தது. அதுமாதிரிதான் இந்தப் படமும் இக்குழுவினருக்கு அமைந்துள்ளது. கேபிள் சங்கர் மூலம்தான் இந்தப் படம் பார்த்தேன். முதலில் நான் ரிலீஸ் செய்ய முயன்றேன். அப்போதைய காலகட்டத்தில் அது முடியவில்லை. பின்னர் ஞானவேல் ராஜா சாரிடம் படம் பார்க்கச் சொன்னேன். அவர் பார்த்து அவருக்குப் பிடித்து, ரிலீஸ் செய்வது மகிழ்ச்சி. இப்படத்தின் பட்ஜெட் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. இந்த அளவு சின்ன பட்ஜெட்டில் எப்படி எடுத்தார்கள் என ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரி படங்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகள்'' என்று பேசினார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா:

''8 வருஷத்துக்கு முன்னால் நடந்த 'அட்டகத்தி' வெளியீடு போலவே, இந்த வெளியீடு அமைந்திருக்கிறது. அனைத்து இயக்குநர்களும் இங்கு வந்து இந்தப் படத்தை வாழ்த்தியுள்ளார்கள். இந்தப் படத்தில் அட்டகாசமாக உழைத்துள்ள அனைவரும், 'அட்டகத்தி' படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது வளர்ந்திருப்பதைப் போல் மிகப்பெரிய அளவில் வளர்வார்கள். இந்தப் படக்குழுவினர் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும். அதை இந்தப் படம் போல் மூன்று மடங்கு பட்ஜெட்டில் நான் தயாரிக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன். இந்தப் படத்தை முதலில் பார்க்கப் போகும்போது வேறொருவர் வாங்கிவிட்டார்கள் என்றார்கள். பின்னர் எங்கெங்கோ சுற்றி என்னிடம் வந்தது. இந்தப் படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்த வகைப்படங்கள் எடுக்கும் அனைவருக்குமே உதாரணமாக இருப்பவர் நலன்தான். அவருடன் ஆர்யா நாயகனாக நடிக்க, அடுத்த மாதம் ஒரு படத்தைத் தொடங்கவுள்ளோம். அது ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான புதிய அனுபவமாக இருக்கும் நன்றி'' என்று பேசினார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்:

''ஒரு மாதத்திற்கு முன் இப்படத்தைப் பார்த்து நிறைய ஆச்சர்யப்பட்டேன். இது ஒரு அசத்தலான படம், ஓடிடிக்காகப் பார்த்த அனைவரும் இப்படத்தைப் பாராட்டினார்கள். 2 மணி நேரம் எப்படிப் போகிறதென்பதே தெரியாமல் விறுவிறுப்பாக இருக்கும். இந்தப் படம் விமர்சர்களுக்கும் ரசிகர்களுக்கும் பிடிக்கும். இனிவரும் தலைமுறைக்குப் பேர் சொல்லும் படமாக “பன்றிக்கு நன்றி சொல்லி” படம் இருக்கும். இம்மாதிரி படங்கள் மக்கள் மத்தியில் சென்று சேர வேண்டும். ஊடகங்கள் இப்படத்தைப் பெரிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் நன்றி'' என்றார்.

இவ்வாறு தயாரிப்பாளர்கள் பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x