ஓடிடியில் வெளியாகிறது ஓ மணப்பெண்ணே

ஓடிடியில் வெளியாகிறது ஓ மணப்பெண்ணே

Published on

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ மணப்பெண்ணே' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘பெல்லி சூப்புலு’. தருண் பாஸ்கர் இயக்கிய இந்தப் படத்தில், ரீத்து வர்மா நாயகியாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இந்தி மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கத் தொடங்கப்பட்டது. ஏ.எல்.விஜய்யிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்திக் சுந்தர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சென்னையிலேயே ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு.

இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது 'ஓ மணப்பெண்ணே'. தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், பல்வேறு படங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்த கூட்டமும் இல்லை.

இதனால் ஓடிடியில் வெளியாகவுள்ளது 'ஓ மணப்பெண்ணே'. ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் நேரடி டிஜிட்டல் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. விரைவில் எப்போது வெளியீடு என்று அறிவித்து, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in