Published : 19 Sep 2021 10:55 AM
Last Updated : 19 Sep 2021 10:55 AM

திருமண வாழ்க்கை குறித்து கேள்வி - பத்திரிகையாளரை கோபமாக திட்டிய சமந்தா

திருமண வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை நடிகை சமந்தா திட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரும் நாகர்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளப் பக்கங்களின் பெயரிலிருந்து நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனி என்ற வார்த்தையை சமந்தா நீக்கிவிட்டார். அப்போதிலிருந்தே நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், இருவருமே இது தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்பாக 'லவ் ஸ்டோரி' படம் தொடர்பாக நாக சைதன்யா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது படம் தொடர்பான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமந்தா தொடர்பான எந்தவொரு கேள்வியையும் கேட்கக் கூடாது என்று செய்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் சமந்தா திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்து அவர் திரும்பிச் வரும்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது நிருபர் ஒருவர் சமந்தாவிடம் அவரது திருமண வாழ்வு பற்றிய வதந்திகள் குறித்து கேள்வி எழுப்பினார். அந்த கேள்வியால் கோபமடைந்த சமந்தா அவரிடம் ‘கோயிலில் இப்படி கேட்கிறீர்களே, புத்தி இருக்கிறதா? என்று தெலுங்கில் கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'ஷகுந்தலம்' ஆகிய படங்களில் சமந்தா கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக இந்தியில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x