Published : 18 Sep 2021 06:48 PM
Last Updated : 18 Sep 2021 06:48 PM

'துக்ளக் தர்பார் 2' உருவாகும்: இயக்குநர் தகவல்

சென்னை

'துக்ளக் தர்பார்' படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என்று இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'துக்ளக் தர்பார்'. இதில் சத்யராஜ், பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 10-ம் தேதி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பானது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 11-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால், மக்கள் மத்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், 'துக்ளக் தர்பார் 2' உருவாகும் என்று இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் பத்திரிகையாளர்கள் மத்தியில் கூறியதாவது:

" 'துக்ளக் தர்பார்' படத்தில் முதல்வர் வேடத்தில் சத்யராஜ் நடித்தார். அது எங்களுடைய படத்துக்குப் பெரிய பலம். முதலில் அந்தக் கதாபாத்திரத்தை வேண்டாம் என்று மறுத்தார். பின்பு கதையைக் கேட்டுவிட்டு நடிக்கச் சம்மதம் தெரிவித்தார். அமாவாசையாக நடித்தபோது எனக்கு 'அமைதிப்படை' படம், இயக்குநர் மணிவண்ணனுடனான நட்பு நினைவுக்கு வருவதாகப் படப்பிடிப்பின்போது தெரிவித்தார்.

'துக்ளக் தர்பார் 2'-வில் முதல்வர் சத்யராஜ், அரசியல்வாதி விஜய் சேதுபதி இடையிலான அரசியல் பிரச்சினைகளைச் சொல்லவுள்ளேன். அந்தப் படத்துக்கு முன்பு முன்னணி நாயகன் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளேன்".

இவ்வாறு டெல்லி பிரசாத் தீனதயாளன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x