Published : 17 Sep 2021 11:26 AM
Last Updated : 17 Sep 2021 11:26 AM

கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமானார்

பிரபல கவிஞரும், காமராஜர் திரைப்படத்தின் வசனகர்த்தாவுமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக் குறைவால் நேற்றிரவு சென்னையில் காலமானார்.

கவிஞர் பிரான்சிஸ் கிருபா திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பத்தினிப்பாறை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். 90களுக்குப் பிறகு கவிதைகளில் கணிசமான பங்களிப்பு காரணமாக நவீன தமிழ்க் கவிதை வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட கவிஞராகத் திகழ்ந்தார்.

இவரது முக்கிய கவிதைத் தொகுப்புகளான மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் போன்றவை மிகவும் நுட்பமான படிமங்களின் மூலம் காதலையும் வாழ்வின் வலிகளையும் செறிவோடு அளித்தவை.

'காமராஜர்' வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதியதோடு அப்படத்திற்கு பாடல்களையும் எழுதினார். இப்படத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பழ.நெடுமாறானாக நடித்தவரும் இவரே.

'வெண்ணிலா கபடிகுழு', 'அழகர்சாமியின் குதிரை', 'ராட்டினம்', 'குரங்கு பொம்மை' உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் பிரான்சிஸ் கிருபா.

தமிழினி பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த 'கன்னி' நாவல் இலக்கியவாதிகளால் மிகவும் கொண்டாடப்பட்டது. சுந்தர ராமசாமி விருது, சம்மனசுக்காடு கவிதைத் தொகுப்புக்காக சுஜாதா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பிரான்சிஸ் கிருபா பெற்றுள்ளார்.

எந்த இயக்கத்திலும், குழுவிலும் தன்னைப் பொருத்திக்கொள்ளாமல் பெரும்பாலும் தனிமையில் இயங்கியவர் பிரான்சிஸ் கிருபா. எனினும் தொடர்ந்து தமிழ் இலக்கிய வெளியில் கவனிக்கப்பட்டு வருபவராக அவரது படைப்புகள் மிளிர்கின்றன.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை இரவு பிரான்சிஸ் கிருபா காலமானார். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் குறிப்புகள் குவிந்து வருகின்றன.

பிரான்சிஸ் கிருபாவின் உடல் இறுதிச் சடங்கிற்காக இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x