Published : 13 Feb 2016 12:06 PM
Last Updated : 13 Feb 2016 12:06 PM
'சார்லி' மலையாளப் படத்தின் ரீமேக் உரிமையை பிரமோத் நிறுவனம் கைப்பற்றி, அதில் நடிக்க தமிழின் முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
2015ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் 'சார்லி'. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கினார். ஃபைண்டிங் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.
மலையாளத்தில் இப்படத்துக்கு இளைஞர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில், இந்தி திரையுலகில் பிரபல நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் 'சார்லி' ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது. துல்கர் சல்மான் வேடத்தில் நடிக்க தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மலையாளத்தில் நாயகியாக நடித்த பார்வதியே தமிழிலும் நாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சித்தார்த் ஆகியோரிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT