Published : 14 Sep 2021 01:32 PM
Last Updated : 14 Sep 2021 01:32 PM

நான் நல்ல படம் எடுத்த தயாரிப்பாளர் இல்லை: தயாரிப்பாளர் ரவீந்தர்

நான் நல்ல படம் எடுத்த தயாரிப்பாளர் இல்லை என்று தயாரிப்பாளர் ரவீந்தர் தெரிவித்தார்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'முருங்கைக்காய் சிப்ஸ்'. ஸ்ரீஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, பாக்யராஜ், ஊர்வசி, யோகி பாபு, மயில்சாமி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தரண் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் தயாரிப்பாளர் ரவீந்திரன் பேசியதாவது:

"இயக்குநர் ஒவ்வொருவருக்கும் தனது படம் சத்யம் திரையரங்கில் இசை விழா நடக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும், கரோனா காலத்தால் நடக்காமல், போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நடப்பது மகிழ்ச்சி.

என் வாழ்க்கை 20/20, வனிதா எனப் போய்விடும் என நினைத்தேன் அந்த வீடியோக்களை பார்த்த இயக்குநர் என்னை இப்படத்தில் நடிக்க வைத்து விட்டார். என்னுடன் நடித்த அனைவரும் நிறைய ஒத்துழைப்பு தந்து நடிக்க வைத்தார்கள். யோகிபாபுவை அடிப்பது மாதிரி ஒரு காட்சி, நிறைய யோசித்தேன், ஆனால் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்கள்.

இங்கு வந்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஆரம்பக் காலத்தில் நான் தயாரிப்பில் நிறைய இழக்காமல் இருக்க உதவினார்கள், என்னைக் காப்பாற்றியவர்கள் அவர்கள் தான். என் மீது அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் திட்டமிட்ட பட்ஜெட்டை விட அதிகமானது ஆனால் படம் நன்றாக வந்துள்ளது. கலை இயக்குநர் படத்தை நல்லா செய்ததை விட என்னை வைத்துச் செய்தது தான் அதிகம், ஆனாலும் படத்தை அழகாகக் கொண்டு வந்துவிட்டார்.

இயக்குநரின் பார்வையில் திருப்திகரமாகப் படம் வந்துவிட்டதா என்ற நோக்கில் தான் நான் படம் செய்கிறேன். அந்த வகையில் இந்தப்படம் எங்களுக்குத் திருப்தியாக வந்திருக்கிறது. நான் நல்ல படம் எடுத்த தயாரிப்பாளர் இல்லை. ஆனால் நல்ல தயாரிப்பாளர் நான் யார் குடியையும் கெடுத்ததில்லை. அனைவரும் குடும்பத்துடன் வந்து சந்தோஷமாகப் பார்க்கும் படமாக இது இருக்கும்"

இவ்வாறு தயாரிப்பாளர் ரவீந்தர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x