Published : 31 Aug 2021 04:45 PM
Last Updated : 31 Aug 2021 04:45 PM

இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜோதிகா: சில மணி நேரங்களில் 14 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். சுதந்திர தினத்தின்போது இமாலய மலைகளுக்குத் தான் பயணப்பட்ட புகைப்படங்களை முதல் பதிவாகப் பகிர்ந்துள்ளார்.

1999ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஜோதிகா சில வருடங்களிலேயே முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வர ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 7 வருடங்கள் இந்த நிலையில் தொடர்ந்த அவர் 2007ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு திரைப்படங்களில் நடிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

பின் 2015ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் நடிப்புத் துறையில் தனது பயணத்தைத் தொடர்ந்தார். தொடர்ந்து ’நாச்சியார்’, ’செக்கச் சிவந்த வானம்’, ’ராட்சசி’, ’காற்றின் மொழி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜோதிகா தற்போது ’உடன்பிறப்பே’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் இதுவரை இணையாத ஜோதிகா செவ்வாய்க்கிழமை அன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் இணைந்தார்.

"அனைவருக்கும் வணக்கம். முதல் முறையாக சமூக ஊடகத்தில். எனது லாக்டவுன் நாட்களிலிருந்து பகிர நிறைய நேர்மறையான விஷயங்கள் உள்ளன.

சுதந்திர தினத்தன்று இமாலய மலைகளில், அழகான காஷ்மீரின் கிரேட் லேக்ஸ், 70 கி.மீ. மலையேற்றம். பிகாட் அட்வென்ச்சர்ஸைச் சேர்ந்த ராகுல், சச்சின், ரவுல் மற்றும் அஷ்வின் மேலும் காஷ்மீரைச் சேர்ந்த முஷ்டாக், ரியாஸ் பாய் என அற்புதமான அணியுடன் சென்றேன். நன்றி. நாம் வாழ ஆரம்பிக்கும் வரை வாழ்க்கை என்பது வெறும் உயிரோடு இருத்தல்தான். இந்தியா அபார அழகு கொண்டது. ஜெய்ஹிந்த்" என்று தனது முதல் பதிவைப் பகிர்ந்துள்ளார் ஜோதிகா.

மேலும், தான் மலையேற்றம் செய்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

ஜோதிகா இன்ஸ்டாகிராமில் இணைந்த சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட 14 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரைப் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, சசிகுமார் நடித்திருக்கும் ’உடன்பிறப்பே’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

A post shared by Jyotika (@jyotika)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x