Published : 28 Aug 2021 03:00 PM
Last Updated : 28 Aug 2021 03:00 PM

இது எனக்கு மறுபிறவி: வடிவேலு பேட்டி

ரெட் கார்ட் நீக்கம் குறித்து வடிவேறு கூறுகையில், இது தனக்கு மறுபிறவி என்று தெரிவித்துள்ளார்.

’இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின்போது ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் விதித்தது. இதனால் வேறு எந்தப் படத்திலும் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் பிரச்சினை தொடர்பாக ஷங்கர் - வடிவேலு இருவருக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

தற்போது இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிந்து, வடிவேலுவுக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை நீக்கியது தயாரிப்பாளர் சங்கம். இதனால் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தயாராகிவிட்டார். இந்தத் தகவல் வடிவேலு ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தான் மீண்டும் நடிக்கவிருப்பது குறித்து வடிவேலு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி. லைகா நிறுவனம் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கவுள்ளேன். இந்த சந்தோஷத்தில் எனக்கு 20 வயது குறைந்துவிட்டது. எனக்கு நல்ல நேரம் பொறந்தாச்சு. மீண்டும் சினிமாவில் தோன்ற இருப்பது, முதன்முதலில் நடிக்கும்போது வாய்ப்பு தேடியது போன்ற உணர்வைத் தருகிறது.

என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம்தான். அவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன்.

சுராஜ் இயக்கத்தில் உருவாகும் 'நாய் சேகர்' படத்தில் செப்டம்பர் மாதம் முதல் நடிக்கவுள்ளேன். அதனைத் தொடர்ந்து 2 படங்களில் நாயகனாக நடித்துவிட்டு, பின்னர் காமெடியனாகவும் நடிக்கவுள்ளேன். தமிழக முதல்வரைச் சந்தித்த பின்னர் எனக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது. மீண்டும் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவிப்பேன்".

இவ்வாறு வடிவேலு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x