Published : 27 Aug 2021 10:57 AM
Last Updated : 27 Aug 2021 10:57 AM

மீண்டும் நிகழ்ச்சித் தொகுப்பு எப்போது? - அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேசிய அர்ச்சனா

தொலைக்காட்சியில் மீண்டும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது எப்போது என்ற கேள்விக்கு தொகுப்பாளினி அர்ச்சனா பதில் அளித்துள்ளார்.

தமிழில் முன்னணித் தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவியில் ‘இளமை புதுமை’, ‘காமெடி டைம்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நான்காவது சீசனில் கலந்துகொண்டார். அதன்பிறகு விஜய் டிவியில் சில முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

இதனிடையே சமீபத்தில் மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு பிரச்சினை ஏற்பட்டதால் அர்ச்சனாவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அர்ச்சனா தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் முறையாக நேற்று தனது யூடியூப் பக்கத்தில் அர்ச்சனா ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடினார். அப்போது மீண்டும் எப்போது விஜய் டிவியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அர்ச்சனா அளித்த பதில்:

''நீங்கள் கேட்டுக்கொண்டால் இப்போதே நான் வரத் தயார். ஆனால், என்னுடைய வலது கால் தொடையில் 16 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவர்கள் அங்கிருந்து தோல் மற்றும் தசைகளை வெட்டி எடுத்து அதை என்னுடைய செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவை அடைக்கப் பயன்படுத்தியுள்ளனர்.

படப்பிடிப்புக்குச் சென்றால் அங்கு 15 அல்லது 16 மணி நேரம் நிற்க வேண்டியிருக்கும். என் கால்கள் இன்னும் பலவீனமாக இருப்பதால், மீண்டும் திரும்பி வர எனக்கு சில நாட்கள் ஆகும். செப்டம்பர் 3ஆம் தேதி எனக்கு ஒரு பரிசோதனை உள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 10 அன்று மீண்டும் வருவேன்''.

இவ்வாறு அர்ச்சனா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x