Published : 20 Jun 2014 05:05 PM
Last Updated : 20 Jun 2014 05:05 PM
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரில் பிரிவு-சி ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது கொலம்பியா.
ஜப்பான், கிரீஸ் அணிகள் மோதிய இதே பிரிவின் மற்றொரு போட்டியில் இரு அணிகளும் 0-0 என்று டிரா செய்ததால் கொலம்பியா அணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி-16 சுற்றில் நுழைந்துள்ளது.
ஜப்பான், கிரீஸ் அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது ஆனால் மீதமிருக்கும் போட்டிகளில் இந்த அணிகள் வெற்றி பெற்றாக வேண்டும்.
கிரீஸ் அணி ஐவரி கோஸ்ட் அணியை எதிர்கொள்ள வேண்டும். ஐவரி கோஸ்ட் அணி 3 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த அணி அன்று ஜப்பானை கடைசி நிமிடத்தில் 2 கோல்கள் அடித்து வென்றது நினைவிருக்கலாம்.
ஜப்பான் அணி கொலம்பியாவை எதிர்கொள்ள வேண்டும். கொலம்பியா 6 புள்ளிகள் பெற்று ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் 64வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக் தலையால் ஒரு கோலை அடித்தார். உடனேயே ஜுவான் குவிண்டிரோ இன்னொரு கோலை அடிக்க கொலம்பியா வெற்றி நடைபோட்டது.
ஐவரி கோஸ்ட் வீரர் ஜெர்வின்ஹோ 73வது நிமிடத்தில் அருமையாக பந்தை எடுத்துச் சென்று அவரே கோலையும் அடித்தார். ஆனால் அதன் பிறகு ஐவரி கோஸ்டால் கோல் அடிக்க முடியவில்லை.
இருப்பினும் கடைசி 15 நிமிடங்கள் ஐவரி கோஸ்ட் ஆட்டத்தில் பொறி பறந்தது. த்ரோக்பா அணிக்கு உத்வேகம் அளித்தார்.
ஐவரி கோஸ்ட் வீரர் ஜெர்வின்ஹோ தனி நபராக எடுத்துச் சென்று அடித்த ஒரே கோல் இந்த உலகக் கோப்பைப் போட்டியின் சிறந்த கோல்களில் ஒன்றாக அமையும். சிறந்த தனி நபர் திறனுக்கு இந்த கோல் எடுத்துக் காட்டாகக் கூறப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT