Published : 26 Aug 2021 07:18 PM
Last Updated : 26 Aug 2021 07:18 PM

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் பெயரில் மோசடி: காவல்துறையினரிடம் புகார் பதிவு

நடிகர் சூர்யாவுக்குச் சொந்தமான 2டி எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் ஒருவர் மோசடி செய்வது தெரியவந்ததையடுத்து, அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யாரோ ஒரு நபர், 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் பிரதிநிதியாகத் தன்னைக் கூறிக்கொண்டு, மின்னஞ்சல் முகவரியைப் புதிதாக உருவாக்கி, நடிகர் தேர்வு என்கிற பெயரில் சிலரிடம் பணம் பறித்துள்ளார்.

இதுகுறித்து 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் ட்விட்டரில் வெளியிடுள்ள அறிக்கை:

''மோசடி எச்சரிக்கை.

2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் பெயரை, இலச்சினையைப் பயன்படுத்தி ஒரு மோசடி நபர் 2dentertainment.gokul@gmail.com என்கிற பெயரில் போலியான இ-மெயில் முகவரி ஒன்றை உருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதை வைத்து நடிகர் தேர்வு என்று சிலரை ஏமாற்றிப் பணம் பறித்து வருகிறார்.

2டி எண்டர்டெய்ன்மெண்ட் இப்படியான எங்க நடிகர் தேர்வையும் நேரடியாக நடத்தாது. எங்கள் நடிகர் தேர்வு எல்லாமே அந்தந்தப் படத்தின் இயக்குநர் அணியின் மூலம், அவர்களின் அலுவலகத்தில்தான் நடக்கும். நடிகர் தேர்வுக்கு நாங்கள் எந்தக் கட்டணமும் வாங்குவதில்லை.

2டி எண்டர்டெய்ன்மெண்ட்டின் பெயரையும், இலச்சினையையும் தவறாகப் பயன்படுத்தி அப்பாவி நபர்களிடம் மோசடி செய்ய முற்பட்ட காரணத்துக்காக இந்த மோசடி நபருக்கு எதிராக 2டி எண்டர்டெய்ன்மெண்ட் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளது.

இதுபோல நடிகர் தேர்வு என்று சொல்லும் இ-மெயில்களைச் சரிபார்க்காமல் யாரும் அவர்களின் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம். அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அனைவரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்".

இவ்வாறு 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x