Published : 16 Aug 2021 08:38 PM
Last Updated : 16 Aug 2021 08:38 PM

எங்கள் நிலை கண்டு இன்னும் ஏன் இந்த மவுனம்? ஆப்கன் பெண் இயக்குநரின் பதிவைப் பகிர்ந்த அனுராக் காஷ்யப்

தங்கள் நாட்டின் நிலை கண்டு ஏன் இன்னும் சர்வதேச அமைப்புகள் அமைதியாக இருக்கின்றன என்று ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் இயக்குநர் சாஹ்ரா கரிமி கேள்வியெழுப்பியுள்ளார். இந்தக் கடிதத்தை இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பல திரைக் கலைஞர்கள் பகிர்ந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் சாஹ்ரா கரிமி நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பகிர்ந்திருக்கும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், இதை அதிகமாகப் பகிர்ந்து பலரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

தலிபான் தங்கள் படையைச் சேர்ந்தவர்களுக்குப் பெண் குழந்தைகளை விற்பது, சரியான உடைகள் அணியாத பெண்களின் கண்களைப் பறிப்பது, அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொல்வது, முக்கியமாக ஊடகம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களை கொன்றது, பல்லாயிரம் குடும்பங்கள் இருப்பிடம் இழந்து தவிப்பது எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து கரிமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆப்கன் நிலவரம் குறித்து சர்வதேச அமைப்புகளின் மௌனத்தையும் கேள்வியெழுப்பியுள்ளார்.

"எங்களுக்கு இந்த மவுனம் பழகிவிட்டது. ஆனால் இது நியாயமற்றது என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் மக்களைக் கைவிட வேண்டும் என்று எடுத்த முடிவு தவறானது. அவசர அவசரமாகப் படைகளைப் பின்வாங்கியது எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்.

அமைதிப் பேச்சுவார்த்தை என்கிற பாவனை தலிபான் தரப்பை இன்னும் ஊக்கப்படுத்தியிருக்கிறது. முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்துக்கு எதிராக போர் தொடுக்க, மக்களைக் கொடுமைபடுத்த தைரியம் தந்திருக்கிறது. இந்தச் சூழலால் கடந்த 20 வருடங்களாக எங்கள் இளம் தலைமுறை பெற்ற ஆதாயங்கள் அனைத்தும் தொலைந்து போகும். மீண்டும் ஆப்கானை தலிபான் ஆண்ட இருண்ட காலத்துக்கு எங்கள் நாடு செல்லும்.

தலிபான் கலைகளைத் தடை செய்வார்கள். அவர்கள் கொல்ல வேண்டிய ஆட்கள் பட்டியலில் நானும் மற்ற இயக்குநர்களும் கூட அடுத்து இருக்கலாம். பெண்களின் உரிமைகளை மொத்தமாகப் பறிப்பார்கள். நாங்கள் இருளில் தள்ளப்படுவோம். வீட்டில் அடைக்கப்படுவோம். எங்கள் குரல் நெறிக்கப்படும். இந்த சில வாரங்களில் தலிபான் பல பள்ளிகளை நாசம் செய்திருக்கின்ற்னார். கிட்டத்தட்ட 20 லட்சம் பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வியை இழந்துள்ளனர்.

எனக்கு இந்த அமைதி புரியவில்லை. இந்த உலகைப் புரியவில்லை. நான் இங்கேயே இருந்து என் நாட்டுக்காகப் போராடுவேன். ஆனால் அதை என்னால் தனியாகச் செய்ய முடியாது. எனக்கு உங்களைப் போன்ற கூட்டாளிகள் வேண்டும். முக்கியமாக எங்கள் நாட்டுக்கு வெளியே இருக்கும் ஊடகங்கள் எங்கள் குரலாக இருக்க வேண்டும்" என்று இந்தக் கடிதத்தில் கரிமி குறிப்பிட்டுள்ளார்.

ஆஃபாக் நாட்டின் திரைப்பட அமைப்பின் முதல் பெண் தலைவர் கரிமி. மேலும் திரைப்பட உருவாக்கத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஆஃப்கானின் ஒரே பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x