Published : 16 Aug 2021 10:35 AM
Last Updated : 16 Aug 2021 10:35 AM

திருடர்கள் ஒருநாள் பிடிபடுவார்கள்: தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை

தொடர்ச்சியாக இணையத்தில் தங்களுடைய தயாரிப்புப் படங்களின் விஷயங்கள் லீக்காகி வருவதால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெலுங்குத் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக வலம் வருவது மைத்ரி மூவி மேக்கர்ஸ். மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்துப் படங்களைத் தயாரித்து வருகிறது.

தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் 'சர்காரு வாரி பாட்டா' மற்றும் அல்லு அர்ஜுன் நடித்து வரும் 'புஷ்பா' ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. சமீபத்தில் 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் டீஸர் மற்றும் 'புஷ்பா' படத்தின் பாடல் ஆகியவை வெளியிடப்பட்டன. ஆனால், இந்த இரண்டுமே அதிகாரபூர்வமாக வெளியாவதற்குள் இணையத்தில் லீக்காகி விட்டன. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

" 'சர்காரு வாரி பாட்டா' மற்றும் 'புஷ்பா' படக் காட்சிகள் கசிந்தது எங்களை வெகுவாக பாதித்துள்ளது. சில சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களால் குரூர மகிழ்ச்சியைப் பெறுகின்றனர். எங்கள் ரசிகர்களின் மகிழ்ச்சியையும் இவர்கள் சிதைத்து விடுகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கரஸ் இந்தப் பிரச்சினையை முக்கியமானதாகக் கருதுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். சைபர் குற்றப் பிரிவில் நாங்கள் புகார் தெரிவித்துள்ளோம். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சைபர் க்ரைமில் புகார் கூறியுள்ளோம். அவர்களும் குற்றவாளிகளைப் பிடித்து கடுமையான தண்டனை தருவதாகக் கூறியுள்ளனர்.

நாங்கள் உங்கள் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம். திருட்டுத்தனமாகத் திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்வது போல் பைரசி வேலைகளை ஊக்குவிக்காதீர்கள். திருடர்கள் ஒருநாள் பிடிபடுவார்கள் என எச்சரிக்கிறோம்".

இவ்வாறு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x