Published : 14 Aug 2021 02:14 PM
Last Updated : 14 Aug 2021 02:14 PM

விஜய் மிகவும் கூல்: பூஜா ஹெக்டே

சென்னை

விஜய் மிகவும் கூலான மனிதர் என்று 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பீஸ்ட்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள்.

'பீஸ்ட்' படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்தப் படப்பிடிப்பு ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் ஒரு ஆக்‌ஷன் காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். 'முகமூடி' படத்துக்குப் பிறகு பூஜா ஹெக்டே நடித்து வரும் படம் 'பீஸ்ட்' என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பூஜா ஹெக்டே கூறியிருப்பதாவது:

"'பீஸ்ட்' படத்தைப் பொறுத்தவரை, என்னுடைய இயக்குநர் நெல்சன் இந்த நேர்காணலை படித்து எனக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளைக் கொடுப்பார் என்று நம்புகிறேன். நான் அதை முயற்சி செய்ய விரும்புகிறேன். படப்பிடிப்பு தளம் மகிழ்ச்சியான இடமாக இருப்பதால் இதுவரை இந்த அனுபவம் மிக சிறப்பாக இருக்கிறது. விஜய் மிகவும் கூலான ஒரு மனிதர், அது எனக்குள்ளும் எதிரொலிக்கிறது.

அவரும் நெல்சனும் படப்பிடிப்பில் ஒரு அற்புதமான சூழலை உருவாக்குவதால் நான் அங்கிருந்து கிளம்ப விரும்புவதில்லை. என்னுடைய கடைசி படப்பிடிப்பில் கூட, சென்னையில் மழை காரணமாக விரைவாகவே படப்பிடிப்பை முடிக்க வேண்டியிருந்தது. எனக்கு மும்பை திரும்பிச் சென்றது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. என்னை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியது போல இருந்தது.

அன்றைய நாளுக்கான படப்பிடிப்பு முடிந்தும் நாம் ‘பை’ சொல்ல விரும்பாத, இன்னும் அதிகம் வேலை செய்ய விரும்புகிற படப்பிடிப்புத் தளங்களே சிறந்த படப்பிடிப்பு தளங்கள். 'பீஸ்ட்' அப்படியான ஒரு பயணமாக இருக்கிறது"

இவ்வாறு பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x