Published : 10 Aug 2021 06:35 PM
Last Updated : 10 Aug 2021 06:35 PM

என் பயோபிக்கில் நீரஜ் சோப்ரா நடித்தால் நன்றாக இருக்கும்: அக்‌ஷய் குமார் 

தனது வாழ்க்கைக் கதையைச் சொல்லும் திரைப்படம் எடுக்கப்பட்டால், அதில் தடகள வீரர் நீரஜ் சோப்ரா நடிப்பது நன்றாக இருக்கும் என நடிகர் அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.

டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற ஒரே ஒரு தங்கப் பதக்கம் இதுவே. நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த அக்‌ஷய் குமார், "100 கோடி பேரின் ஆனந்தக் கண்ணீருக்கு நீங்கள் பொறுப்பு" என்று ட்வீட் செய்திருந்தார்.

அக்‌ஷய் குமார் ஒரு சில பயோபிக்கில் நடித்திருப்பதால் அவரது இந்த ட்வீட்டுக்குப் பிறகு, நீரஜ் சோப்ராவின் பயோபிக்கில் அக்‌ஷய் நடிப்பார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். மீம்களைப் பகிர்ந்தனர்.

2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு போட்டியின் போது ஊடகங்களிடம் பேசியிருந்த சோப்ரா, தனது பயோபிக்கில் ரந்தீப் ஹூடா அல்லது அக்‌ஷய் குமார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். சமீபத்தில் இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கும் அக்‌ஷய் குமார், "நான் அவரது பயோபிக்கில் நடிப்பது குறித்து வரும் மீம்களை என் மனைவி ட்விங்கிள் கண்ணாவும் என்னிடம் பகிர்ந்தார். பார்க்க நகைச்சுவையாக இருந்தன.

நீரஜ் சோப்ரா பார்க்க நன்றாக இருக்கிறார். எனது பயோபிக் என்று ஏதாவது எடுக்கப்பட்டால் அதில் எனது கதாபாத்திரத்தில் அவர் நடிக்க வேண்டும்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நீரஜ் சோப்ரா, தனக்கு இன்னும் பயோபிக் எடுக்கும் அளவுக்கு வயதாகவில்லை என்றும், தனது ஓய்வுக்குப் பிறகு எடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x