Published : 07 Aug 2021 03:00 PM
Last Updated : 07 Aug 2021 03:00 PM

முதல் பார்வை: பீஸ் (நவரசா)

படத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரி அமைதி, சாந்தம் என்ற ரசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள கதை. இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

ஈழப் போர் தான் களம். கெளதம் மேனன், பாபி சிம்ஹா, சனந்த், விது ஆகிய நாலு பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் எல்லையில் ஒரு பகுதியில் ராணுவத்தின் துப்பாக்கிச் சூடு நடந்தால் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஒரு சிறுவன் (மாஸ்டர் தருண் ) இவர்களுடைய எல்லைக்குள் வந்து ஒரு உதவிக் கேட்கிறான். அது என்ன உதவி, அதனால் என்ன ஆனது என்பது தான் இந்தக் கதை.

பாபி சிம்ஹா, கெளதம் மேன, மாஸ்டர் தருண் என அனைவருமே பொருத்தமான தேர்வு. ஈழத் தமிழ் உச்சரிப்பை அனைவருமே சரியாகப் பேசியிருக்கிறார்கள். ஒரு இயக்குநராக, தொழில்நுட்பக் கலைஞராக கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தில் அப்ளாஸ் அள்ளுகிறார். ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் கிருஷ்ணாவுடன் இணைந்து இவர் வைத்துள்ள காட்சியமைப்புகள் அற்புதமாக அமைந்துள்ளன. ஒரு பொட்டல் காடு, பக்கத்தில் கொஞ்சம் மரங்கள் என்று ஒரே இடத்தில் கதை நகர்ந்தாலும், வித்தியாசம் காட்டியுள்ளார்கள்.

கதையில் வசனங்களிலிருந்து தொடங்கி அப்படியே கதையில் உருவாகும் பதட்டம், பாபி சிம்ஹா கதாபாத்திரம் செய்யும் விஷயம், அவர் ஏன் அதைச் செய்கிறார் என்பதற்கான காரணம், அவர் காப்பாற்றும் உயிர் என்று குறும்படத்துக்கே உண்டான சின்னசின்ன விஷயங்களில் தான் ஒரு நிபுணர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

போர், அதனால் பாதிக்கப்படும் உயிர்கள், கையில் ஆயுதம் இருந்தாலும் ஒருத்தரின் மனதுதான் யாரைக் கொல்ல வேண்டும் என முடிவு செய்கிறது என்ற செய்தி எனப் பல விஷயங்கள் இருந்தாலும், படத்தின் கருத்திலும் உருவாக்கப்பட்ட விதத்திலும் கவனிக்க வைக்கும் இந்தக் கதை முழுமையாக இல்லை என்பது தான் உண்மை.

இதற்குக் காரணம், கடைசியில் பாபி சிம்ஹா செய்யும் ஒரு விஷயம். இது, இந்தக் கதையை அதிர்ச்சியாக முடிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே வைத்தது போல இருக்கிறதே தவிர இயல்பாகக் கதையோட்டத்தில் பொருந்தவில்லை. ஆனால் கதை சொல்லப்பட்ட விதத்துக்காக இந்த ரசத்துக்கு ஏற்ற அமைதியோடு பார்த்து ரசிக்கக்கூடிய கதை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x