Last Updated : 07 Aug, 2021 02:50 PM

 

Published : 07 Aug 2021 02:50 PM
Last Updated : 07 Aug 2021 02:50 PM

முதல் பார்வை: பாயசம் (நவரசா)

சென்னை

அண்ணன் மகன் மீதான அருவருப்பைக் காட்டும் முதியவரின் செயலே 'பாயசம்'.

சாமநாது 77 வயதுப் பெரியவர். தன் அண்ணன் மகன் சுப்பராயன் என்றாலே அவருக்குப் பிடிக்காது. ஊரிலேயே நடக்கும் சுப்பராயனின் மகள் திருமணத்துக்குச் செல்லாமல் காலம் கடத்துகிறார். பிறகு அவராகவே செல்கிறார். அங்கு நடக்கும் நிகழ்வுகளில் அவரது மனம் லயிக்கவில்லை. தொடர்ந்து ஏதேனும் ஒரு குறையைச் சொல்லி முனகியபடியே இருக்கிறார். மரியாதை, புகழ், பெருமை என அனைத்தும் சுப்பராயனுக்குக் கிடைப்பதை அவர் விரும்பவில்லை. இந்நிலையில் மெல்ல அவர் அந்த இடத்தை விட்டு நகர்கிறார். திருமணத்தில் என்ன நடந்தது, அவர் தன் இயலாமையை எப்படித் தீர்த்துக் கொள்கிறார், அவர் அப்படி இருப்பதற்கான காரணம் என்ன என்று விரிகிறது திரைக்கதை.

தி.ஜானகிராமனின் பாயசம் சிறுகதைக்கு அழகாகத் திரைவடிவம் கொடுத்துள்ளார் இயக்குநர் வஸந்த். கதையைத் திரைக்கதை ஆக்கிய விதத்திலும், காட்சியமைப்புகளிலும் நேர்த்தி பளிச்சிடுகிறது.

77 வயதுப் பெரியவராக டெல்லி கணேஷ் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரின் அனுபவம் இலகுவாகக் கைகொடுத்திருக்கிறது. அசாதாரணமான நடிப்பால் வெறுப்பை உமிழ்ந்து ஆச்சரியப்படுத்துகிறார்.

ரோகிணி பொருத்தமான பாத்திர வார்ப்பு. சுப்பராயனாக குமார் நடராஜன் சிரிப்பு சூழ வலம் வருகிறார். சாமநாதுவின் மகன் நடராஜனாக கார்த்திக் கிருஷ்ணா (செல்ஃபி ரிவ்யூ) இயல்பான உடல் மொழியில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். திருமண வைபவங்களில் ஓடி ஆடி வேலை செய்யும் இளைஞரைக் கண்முன் நிறுத்தியுள்ளார்.

92 நாட்களில் கணவனை இழந்த கைம்பெண் கதாபாத்திரத்தில் அதிதி பாலன் பக்குவமான நடிப்பைக் கொடுத்துள்ளார். மணப்பெண்ணுக்காக சவுரி முடி கொடுக்கும் காட்சியில் அன்பையும், பருப்பு பாயசத்தின் செய்முறை விளக்கத்தின் போது ஏக்கத்தையும், அப்பாவின் செயலுக்காக முள்ளாகப் பார்க்கும் விதத்தில் அதிருப்தியையும் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

காத்தாடி ராமமூர்த்தியும், பகவதி பெருமாளும் அந்தக் கொஞ்ச நேரத்திலும் கலகலப்பூட்டுகிறார்கள்.

உமாதேவியின் வரிகளில் கண்ணூஞ்சல் பாடல் கதைக்கு வலு சேர்க்கிறது. சத்யன் சூரியனின் கேமரா திருமண வீட்டின் அத்தனை அசைவுகளையும் கண்களுக்குள் கடத்துகிறது. வாத்தியக் கருவிகளைக் கொண்டே பின்னணி இசையை அமைத்த விதத்தில் ஜஸ்டின் பிரபாகரன் ஈர்க்கிறார். சங்கத்தமிழனின் எடிட்டிங் அவ்வளவு கச்சிதம்.

வெறுப்பு என்கிற உணர்வை அவ்வளவு எளிதாகக் காட்சிப்படுத்திவிட முடியாது. அதற்கு நடிகர்களின் பங்களிப்பு முக்கியம். அந்த விதத்தில் கதாபாத்திரத் தேர்விலும், திரைக்கதையிலும் வஸந்த் திரும்பியும் விரும்பியும் வந்துள்ளார். பயம் உடல் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும். வெறுப்பு மனதுக்கு, ஆன்மாவுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதைச் சொன்னவிதம் பாராட்டுக்குரியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x