Published : 07 Aug 2021 10:25 AM
Last Updated : 07 Aug 2021 10:25 AM

நயன்தாரா போன்றவர் கியாரா அத்வானி - இயக்குநர் விஷ்ணுவர்தன் புகழாரம்

நயன்தாரா போன்றவர் கியாரா அத்வானி என்று இயக்குநர் விஷ்ணுவர்தன் புகழாரம் சூட்டியுள்ளார்.

1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர் விக்ரம் பத்ரா. ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 24 வயதிலேயே வீர மரணம் அடைந்த இவருடைய வாழ்க்கையைத்தான் படமாக இயக்கியுள்ளார் விஷ்ணுவர்தன்.

தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் விஷ்ணுவர்தன், இந்தப் படத்தின் மூலமாக இந்தியில் அறிமுகமாகிறார். 'ஷெர்ஷா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். இதில் விக்ரம் பத்ரா வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். அவருடன் கியாரா அத்வானி, ஜாவின் ஜாஃப்ரி, ஷிவ் பண்டிட், பவன் சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீவஸ்தவா, படத்தின் கதையை எழுதியுள்ளார்.

இப்படம் குறித்த தகவல்களை இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நமது படத்துக்கு சரியான நடிகர்கள் கிடைத்து விட்டால் 50 சதவீத போரில் நாம் வென்றுவிட்டோம் என்று அர்த்தம். மீதி 50 சதவீதம் அவர்கள் எப்படி நடிக்கப் போகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. நான் சந்தித்த புத்திசாலித்தமான மற்றும் அறிவார்ந்த நடிகைகளில் கியாரா அத்வானியும் ஒருவர். அப்படி நான் கடைசியாக சந்தித்த ஒரு நடிகை நயன்தாரா.

நயனுடன் பணிபுரிந்த போது அவர் மிகவும் புத்தி கூர்மையான மற்றும் அறிவார்ந்த பெண் என்பதை உணர்ந்தேன். அதே உணர்வு கியாராவுடன் பணிபுரியும்போதும் எனக்கு ஏற்பட்டது. அவர்களுக்கு காட்சியைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை கொடுத்தால் போதும், அதை அவர்கள் மிக விரைவாக உள்வாங்கிக் கொள்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x