Published : 05 Aug 2021 03:07 PM
Last Updated : 05 Aug 2021 03:07 PM

தொடர்ந்து தமிழ் திரையுலகைக் கவனித்து வருகிறேன்: சிவராஜ்குமார்

பெங்களூரு

தொடர்ந்து தமிழ் திரையுலகைக் கவனித்து வருகிறேன் என்று சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள கன்னட படம் 'பைராகி'. இதில் நாயகனாக சிவராஜ்குமார் நடித்துள்ளார். அவருடன் இணைந்து அஞ்சலி, தனஞ்ஜெயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்தது மற்றும் தமிழ் சினிமா குறித்து சிவராஜ்குமார் கூறியிருப்பதாவது:

"நான் தமிழ் சினிமாவின் ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகைக் கவனித்து வருகிறேன். அங்கு வெளியாகும் அனைத்து படங்களையுமே, உடனடியாக பார்த்து விடுவேன். நான் கமல் சாரின் தீவிர ரசிகன். அவரின் படங்களை முதல் நாளில் பார்த்து விடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான படங்களைச் செய்து வருகிறார்.

தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணிபுரிவது எப்போதும் மிகவும் பிடித்த விஷயம். இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாகத் தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறிய போது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசமான ஆக்‌ஷன் கலந்து ஒரு அற்புதமான கதை இருந்தது தெரிந்தது.

எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இது இருக்கும். விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராக இருந்து கஷ்டப்பட்டு உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதால், சினிமா குறித்த தேர்ந்த அறிவு அவரிடம் கொட்டிக்கிடக்கிறது. எதையும் எளிமையாகச் செய்துவிடும் திறமை அவரிடம் இருக்கிறது.

மக்கள் 35 வருடமாக என்னைக் கொண்டாடி வருகிறார்கள்.அவர்களின் அன்புக்கு உண்மையாக உழைக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் ரசிக்கும்படி படங்கள் தரக் கடினமாக உழைப்பேன். இந்தப்படமும் அவர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும்"

இவ்வாறு சிவராஜ்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x