Published : 02 Aug 2021 02:28 PM
Last Updated : 02 Aug 2021 02:28 PM

திமுக ஆட்சிக்கு குந்தகம்; சிம்பு பட ஷூட்டிங்கைத் தடுக்கிறார்: முரளி மீது சிங்காரவேலன் கடும் குற்றச்சாட்டு

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் சிங்காரவேலன்.

தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவும் ஏற்பட்டு 3 சங்கங்களாகப் பிரிந்துள்ளன. தேனாண்டாள் முரளி தலைமையில் தயாரிப்பாளர் சங்கம், பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம், உஷா ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் முரளி திமுகவுக்கு மிகவும் நெருக்கமானவர். இவருடைய தந்தை இராம.நாராயணன் திமுக எம்.எல்.ஏவாகப் பதவி வகித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.

தற்போது திமுக ஆட்சி என்பதால் தேனாண்டாள் முரளி சர்வதிகாரி போல் செயல்படுவதாக சிங்காரவேலன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக சிங்காரவேலன் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார் தலைவர் முரளி. பலரும் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். திமுக ஆட்சி எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பெருமையுடன் சொல்கிறேன். இந்த ஆட்சி பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் ஆசை. அதற்கு தலைவர் முரளி குந்தகம் விளைவிக்கிறார். அவர் தலைவரைச் சந்திப்பது எளிது. "தளபதி தான் சொல்வதைத்தான் கேட்கிறார். தமிழ் திரையுலகமே நான்தான்" என்பது போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

"ஆட்சியில் இருப்பவர்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை. நான்தான் அவர்களைச் சரிகட்டி வைத்துள்ளேன். ஆகையால் நான் சொன்னால் நீங்கள் பதவியில் நீடிக்கலாம்" என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் சொல்லி இருக்கிறார் முரளி.அதன் மூலம் நான் சொல்லும் படங்களுக்கு நீங்கள் தடை போட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார். என்ன அநியாயம் இது. தன்னை எதிர்ப்பவர்களை நோகடிப்பது எந்த வகையில் நியாயம்?

வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி சிம்பு - கெளதம் மேனன் படப்பிடிப்பு தொடங்குவதாக உள்ளது. பெப்சியை அழைத்து நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது எனச் சொல்லியிருக்கிறார். இதனை ஐசரி கணேஷுக்கு போன் செய்து தலைவர் சொல்லிவிட்டார், நாங்கள் வர முடியாது என்று பெப்சியில் இருந்து சொல்லியிருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தலைவர் ஸ்டாலின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார். சிம்பு படத்தின் படப்பிடிப்பை எப்படி அவர் நிறுத்தலாம்? கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் பைனான்சியர் போன் செய்தால் முதல்வரைப் பார்க்கச் சொல்கிறேன் என்று சொல்லி மறைமுகமாக மிரட்டுகிறார். இதை அனைத்தையும் தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டுசெல்வோம்.

பெப்சி மிரட்டுவது, நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை மிரட்டுவது உள்ளிட்டவற்றை எல்லாம் முரளி நிறுத்த வேண்டும். சிம்பு பணத்தைக் கொடுப்பார். திருப்பூர் சுப்பிரமணியம், மன்னார், அருள்பதி உள்ளிட்டோர் முன்னிலையில் பேசுவோம். மைக்கேல் ராயப்பனுக்குப் பணம் கொடுக்க வேண்டியதிருந்தால் ஆணித்தரமாகப் பெற்றுத் தருவோம். நீங்களே கடன்காரர் என்னும்போது, உங்கள் முன்னால் ஏன் பேச வேண்டும்?"

இவ்வாறு சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடியோ பதிவில் ஒரு கட்டத்துக்கு மேல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளியை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் சிங்காரவேலன். இந்தப் பதிவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. மேலும், பரபரப்பாகப் பேசப்பட்டும் வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x