Published : 01 Aug 2021 11:20 AM
Last Updated : 01 Aug 2021 11:20 AM

‘ஜோக்கர்’ போன்றது என் கதாபாத்திரம் - ‘நெற்றிக்கண்’ அனுபவம் பகிரும் அஜ்மல்

‘நெற்றிக்கண்’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் ‘ஜோக்கர்’ பாத்திரத்தை போன்றது என்று நடிகர் அஜ்மல் கூறியுள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ படத்தில் அறிமுகமானவர் அஜ்மல். தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கோ’ படத்தில் அவருடைய நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்த அவர் தனது மருத்துவ மேற்படிப்புக்காக லண்டன் சென்றதால் நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட்டிருந்தார். தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘நெற்றிக்கண்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரல் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அஜ்மல் கூறியுள்ளதாவது:

‘கோ’ படத்திற்கு பிறகு நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனது மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதால் எந்த வாய்ப்புகளையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது மீண்டும் நடிப்புக்கு திரும்ப ‘நெற்றிக்கண்’ மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது. இரண்டு கதாப்பாத்திரங்களின் ஆடு புலி ஆட்டம் தான் மொத்தப்படமுமே என்பதால் எனது பாத்திரம் இதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஆங்கில 'ஜோக்கர்' பட பாத்திரத்தை ஒத்தது தான் இப்படத்தில் என்னுடைய பாத்திரம்.

சைக்கோ வில்லனாக இருந்தாலும் தனித்து தெரியும் பாத்திரமாக இருக்கும். ரசிகர்கள் கண்டிப்பாக எனது கதாப்பாத்திரத்தை ரசிப்பார்கள். நயன்தாரா, கேமராமேன் ஆர்.டி. ராஜ சேகர், தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன், இயக்குநர் மிலிந்த் ராவ் என இந்த கூட்டணியே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூட்டணி. இந்தப்படம் இதுவரையிலான தமிழ் த்ரில்லர்களை மிஞ்சும் படைப்பாக இருக்கும்.

இவ்வாறு அஜ்மல் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x