Published : 29 Jul 2021 10:39 AM
Last Updated : 29 Jul 2021 10:39 AM

கண்களின் வழி உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகர் சித்தார்த் - பார்வதி புகழாரம்

கண்களின் வழி உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகர் சித்தார்த் என்று நடிகை பார்வதி திருவோத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

இதில் ‘இன்மை’ என்று தலைப்பிடப்பட்டுள்ள ஒரு படத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சித்தார்த், பார்வதி திருவோத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'நவரசா' ஆந்தாலஜியில் நடித்திருப்பது குறித்து நடிகை பார்வதி திருவோத்து கூறியிருப்பதாவது:

நடிகர் சித்தார்த் கண்களாலேயே பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த நடிகர். என்னை விட்டு தூரமாக அவர் நின்றாலும், அவர் கண்களின் வழி அவரது உணர்வுகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். படப்பிடிப்பில் இது, எனக்கு நடிப்பில் மிகப்பெரும் உதவியாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்தது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.

இப்படம் ஒரு அறுசுவை விருந்தாக இருந்தது. நடிகர் சித்தார்த் அவர்களும், நானும் படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்னர் ஆன்லைனில் சிலமுறை பேசி இப்படம் குறித்து ரிகர்சல் செய்துகொண்டோம். இணையவெளியிலிருந்து அப்படியே படப்பிடிப்பிலும் அதே மாயம் நிகழந்தது அற்புதமாக இருந்தது. எவ்வித தடங்களுமின்றி, மிக எளிதாக இந்த படப்பிடிப்பு நிகழ்ந்தேறியது. முன்னணி கலைஞர்கள் அத்தனை பேரின் அர்ப்பணிப்பில் வெகு இயல்பாக ஒரு அற்புத படைப்பு உருவாகியுள்ளது. திரைத்துறை நண்பர்கள் இணைந்து தங்கள் சக தோழர்களின் நலனுக்கு இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை உருவாக்கியுள்ளது மகிழ்ச்சி.

இவ்வாறு பார்வதி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x