Published : 27 Jul 2021 07:45 PM
Last Updated : 27 Jul 2021 07:45 PM

ஆபாசப் பட வழக்கு விவகாரம்: ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுது சண்டையிட்ட ஷில்பா ஷெட்டி

ஆபாசப் பட வழக்குத் தொடர்பாக குற்றப் பிரிவு அதிகாரிகள் ராஜ் குந்த்ராவின் வீட்டைச் சோதனையிட்டபோது நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ் குந்த்ராவிடம் கதறி அழுது, சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது.

வெப் சீரிஸ் என்கிற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்தனர்.

ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றப் பிரிவு காவல்துறையினர் ராஜ் குந்த்ரா வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த குந்த்ராவின் மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் வருத்தமடைந்த ஷில்பா ஷெட்டி அதிகாரிகள் முன்னிலையிலேயே ராஜ் குந்த்ராவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அங்கிருந்த அதிகாரிகள் தலையிட்டு, அவரை சமாதானம் செய்துள்ளனர்.

காவல்துறையினர் முன் அழுத ஷில்பா ஷெட்டி, தனக்கு ராஜ் குந்த்ரா செய்த தவறுகள் பற்றி எதுவும் இதுவரை தெரியாது என்று கூறியுள்ளார். மேலும், குந்த்ராவின் செயலால் குடும்பத்துக்கு அவப்பெயர் வந்ததோடு துறையில் பல வாய்ப்புகளும் பறிபோயுள்ளன, பண ரீதியாகவும் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது, சமூகத்தில் நாம் நல்ல நிலையில் இருந்தும் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று ராஜ் குந்த்ராவை ஷில்பா ஷெட்டி சராமாரியாகக் கேள்வி கேட்டதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு விசாரணையில், குந்த்ரா மற்றும் ஷெட்டி இருவரும் இணைந்து வங்கியில் கூட்டுக் கணக்கு வைத்திருந்ததாகவும், இந்தக் கணக்கின் மூலமாகப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும், ராஜ் குந்த்ரா நடத்தி வந்த செயலிகள் மூலமாகப் பெற்ற வருவாய் அனைத்தும் இந்தக் கணக்கிலேயே வந்து சேர்ந்ததாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

முன்னதாக, குந்த்ராவிடம் பணியாற்றிய நான்கு ஊழியர்கள் அவருக்கு எதிரான சாட்சிகளாக மாறினர். அத்தனை காணொலிகளையும் நீக்கிவிடத் தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாக அவர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x