Published : 23 Jul 2021 12:06 PM
Last Updated : 23 Jul 2021 12:06 PM

ராஜ் குந்த்ரா குறித்த வீடியோ: கொலை மிரட்டல் வருவதாக பிரபல மாடல் குற்றச்சாட்டு

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா குறித்து வீடியோ வெளியிட்டதால் தனக்குக் கொலை மிரட்டல் வருவதாக பிரபல மாடல் சகாரிகா ஷோனா சுமன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆபாசப் படம் தயாரித்து அவற்றை 'ஹாட்ஷாட்ஸ்' என்ற செல்போன் செயலியின் மூலம் பிரபலப்படுத்தி சம்பாதித்த வழக்கில் தொழிலதிபரும், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். அவருடன் அவருடைய உதவியாளர் ரயான் தோர்பேவும் கைது செய்யப்பட்டார்.

மும்பை போலீஸாரின் இந்த நடவடிக்கை பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதராக ட்வீட்களைப் பதிவிட்டு வருகின்றனர். போலீஸ் தரப்பில் இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா (45) தான் முக்கியக் குற்றவாளி என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகைகள், மாடல்கள் உட்படப் பலரும் ராஜ் குந்த்ராவுக்கு எதிராகத் தங்களது வாக்குமூலங்களை வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல மாடலான சகாரிகா ஷோனா சுமன், தான் வெளியிட்ட ஒரு வீடியோவில் ராஜ் குந்த்ரா தன்னிடம் நிர்வாண வீடியோ கேட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். இது பல்வேறு ஊடகங்களில் செய்தியாகவும் வெளியானது.

இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் ஆதரவாளர்கள் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாக சகாரிகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது:

''நான் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். காரணம் பல்வேறு ஆன்லைன் தளங்களில் இருந்து எனக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். என்னைக் கொலை செய்து விடுவதாகவும், பாலியல் வன்கலவி செய்து விடுவதாகவும் கூறுகிறார்கள். வெவ்வேறு எண்களில் இருந்து அழைக்கும் அவர்கள் என்னிடம் ராஜ் குந்த்ரா என்ன தவறு செய்தார் என்றும் கேட்கிறார்கள்''.

இவ்வாறு சகாரிகா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x