Published : 22 Jul 2021 08:02 PM
Last Updated : 22 Jul 2021 08:02 PM

ஒரு பாடல் பல வருடங்கள் கழித்தும் புதுமையாக இருக்க வேண்டும்: இளையராஜா

ஒரு பாடல் வெளியாகி எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அது புதுமையாக ஒலிக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசியுள்ளார்.

பிரசாத் ஸ்டூடியோ சர்ச்சைக்குப் பிறகு தனது புதிய ஸ்டூடியோவை கோடம்பாக்கத்தில் திறந்தார் இளையராஜா. சமீபத்தில் இதில் சில பத்திரிகையாளர்களை சந்தித்த இளையாராஜா பேசியிருப்பதாவது:

"ஒரு பாடலை ஒருவர் எப்போது கேட்டாலும் அது சற்று முன் பூத்த பூ போல இருக்க வேண்டும். எப்போது கேட்டாலும் அது புதிது போல, புதிதாக மெட்டமைக்கப்பட்டது போல இருக்க வேண்டும். அப்படியான பாடல்களை நோக்கித்தான் நமது மனம் எப்போதும் செல்லும். இதனால் தான் பழைய பாடல்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். ஏனென்றால் அந்தப் பாடல்கள் இன்றும் புதுமையான தன்மையை பெற்றிருக்கிறது" என்று இளையராஜா பேசியுள்ளார்.

கரோனா நெருக்கடியால் திரைத்துறை பாதிக்கப்பட்டிருப்பது குறித்துப் பேசியிருக்கும் இளையராஜா, அதனால் அதனது இசையமைக்கும் பணியும் தொய்வை சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளார். புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பயன்படுத்திய இசைக் கருவிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் இளையராஜா கூறியுள்ளார்.

"நான் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியிடம் இது பற்றி பேசியிருந்தேன். அந்த காலத்தைச் சேர்ந்த பல இசைக் கலைஞர்களின், இசையமைப்பாளர்களின் மரபை நாம் பாதுகாக்க வேண்டும் என்று அவரிடம் கோரியிருக்கிறேன்" என்று இளையராஜா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x