Published : 21 Jul 2021 06:19 PM
Last Updated : 21 Jul 2021 06:19 PM

ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் முடிந்து படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் அடங்கும். தற்போது ஷாரூக்கான் மற்றும் ஜான் ஆபிரஹாம் மோதும் சண்டைக்காட்சி ஒன்றை மும்பையில் படமாக்கி வருகிறார்கள்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் ஷாரூக்கான். இதன் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக நடிக்க நயன்தாரா உள்ளிட்ட பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தாலும், இந்தியில் நடிக்காமலேயே இருந்தார் நயன்தாரா. ஏற்கெனவே அட்லி இயக்கத்தில் 'ராஜா ராணி', 'பிகில்' ஆகிய படங்களில் நடித்திருப்பதால் ஷாரூக்கான் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டார் நயன்தாரா. ஷாரூக்கான் - அட்லி இணையும் படத்தின் மூலமே நயன்தாரா இந்தியில் அறிமுகமாகவுள்ளார்.

இந்தப் படத்தில் இதர திரையுலகிலிருந்து முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்கவுள்ளனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x