Published : 12 Jul 2021 08:23 PM
Last Updated : 12 Jul 2021 08:23 PM

'தலைவி' திரைப்பட வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டதா?- கங்கணா பதிவு

'தலைவி' திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து வரும் செய்திகளுக்கு பதில் சொல்லும் விதமாக நடிகை கங்கணா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'தலைவி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் 'தலைவி' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் வெளியீட்டை ஒத்திவைத்தது படக்குழு.

'தலைவி' படத்தின் பணிகளை முடித்து, தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. இதற்குத் தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கினர். இந்நிலையில் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாகச் சில செய்திகள் பரவின.

இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் படத்தின் நாயகி கங்கணா, "தலைவி படம் என்று வெளியாகும் என்பது குறித்து எந்தத் தேதியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. புரளிகள் பரப்புவதை நிறுத்துங்கள். தேசம் முழுவதும் எப்போது திரையரங்குகள் திறக்கப்படுகிறதோ அப்போது படத்தை வெளியிடுவோம். நன்றி" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 'தலைவி' ஒரே நேரத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x