Published : 12 Jul 2021 07:46 PM
Last Updated : 12 Jul 2021 07:46 PM

'ஜாதி ரத்னாலு' இயக்குநருடன் கை கோக்கும் சிவகார்த்திகேயன்?

தெலுங்கில் 'ஜாதி ரத்னாலு' மூலம் முதல் படத்திலேயே வெற்றி கண்ட இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகச் செய்தி பரவி வருகிறது.

'மஹாநடி' இயக்குநர் நாக் அஷ்வின் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'ஜாதி ரத்னாலு'. முழு நீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் நவீன் போலிஷெட்டி, ப்ரியதர்ஷினி, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வருடம் மார்ச் 11 அன்று வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவிலும் இந்தப் படம் அதிக வசூலைப் பெற்று, சாதனை படைத்தது.

இந்தப் படத்தை நகைச்சுவைத் திருவிழா என்று கூறி தெலுங்குத் திரையுலகத்தின் நட்சத்திரங்கள் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர். தற்போது இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் அறிமுகமாகிறார். சில தினங்களுக்கு முன் தனுஷும், தெலுங்கு நடிகர் சேகர் கமுல்லாவும் இணையும் தெலுங்குப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து 'டாக்டர்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தற்போது 'அயலான்', 'டான்' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x