Published : 12 Jul 2021 02:18 PM
Last Updated : 12 Jul 2021 02:18 PM

செல்வராகவன் - தனுஷ் படத்தின் கதைக்களம் மாற்றம்?

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் கதையே மாற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.

மித்ரன் ஜவஹர் படத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 20-ம் தேதி செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு 'நானே வருவேன்' எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிவிட்டது. இதற்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், தலைப்பு மட்டுமன்றி படத்தின் கதைக்களத்தையே செல்வராகவன் மாற்றியிருக்கிறார். 'நானே வருவேன்' படத்தின் கதை, தயாரிப்பாளர் தாணுவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கேங்ஸ்டர் பின்னணியில் புதிதாக ஒரு கதை உருவாக்கிச் சொல்லியிருக்கிறார்.

அனைவருக்குமே இந்தக் கதை பிடித்திருப்பதால், தற்போது அதே குழுவினருடன் புதிய கதையில் பணிபுரியவுள்ளார் செல்வராகவன். 'ராயன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், விரைவில் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x