Published : 08 Jul 2021 06:01 PM
Last Updated : 08 Jul 2021 06:01 PM

ஹ்ரித்திக் ரோஷன் - தீபிகா படுகோன் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம்

'வார்’ இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், தீபிகா படுகோன் நடிப்பில், ’ஃபைட்டர்’ என்கிற திரைப்படம் உருவாகவுள்ளதாக வயாகாம்18 நிறுவனம் அறிவித்துள்ளது.

’பேங் பேங்’, ’வார்’ ஆகிய படங்களில் ஏற்கெனவே ஹ்ரித்திக் ரோஷனை இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். தற்போது ஷாரூக் கான் நடிக்கும் ’பதான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதமே ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் 'ஃபைட்டர்' படத்தை சித்தார்த் ஆனந்த் தயாரித்து இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகு இந்தப் படம் குறித்து எந்தச் செய்தியும் வெளியாகவில்லை.

தற்போது வயாகாம் 18 தயாரிப்பு நிறுவனம், ’ஃபைட்டர்’ படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சித்தார்த் ஆனந்தின் தயாரிப்பு நிறுவனமும் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறது. ஹ்ரித்திக் ரோஷன் விமானப் படை அதிகாரியாக நடிக்கவுள்ளார். ஹாலிவுட்டைப் போல முதன்முறையாக இந்திய சினிமாவில் வான்வழி சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிப் பேசியிருக்கும் இயக்குநர் சித்தார்த் ஆனந்த், "ஃபைட்டர் என் கனவுப் படம். இந்தப் படத்தின் மூலம், பெரிய திரையில் பிரம்மாண்ட ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்க்க விரும்பும் சர்வதேச ரசிகர்களிடம் இந்தியத் திரைப்படங்களைச் சென்று சேர்க்க முயல்கிறோம்" என்று கூறியுள்ளார்.

நவீன தொழில்நுட்பங்கள், படமாக்கும் கருவிகளைக் கொண்டு, மிகப்பெரிய பட்ஜெட்டில், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இந்திய விமானப் படையின் சேவை, தியாகம், வீரம், நாட்டுப்பற்று ஆகியவற்றைப் பறைசாற்றும் படமாகவும் இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக் காலத்துக்குப் பின், மிக அதிக பொருட்செலவில் அறிவிக்கப்பட்டுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும். அடுத்த ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x