Last Updated : 06 Jul, 2021 04:29 PM

 

Published : 06 Jul 2021 04:29 PM
Last Updated : 06 Jul 2021 04:29 PM

5 வருடங்களுக்குப் பிறகு கரண் ஜோஹர் இயக்கம்: புதிய படம் அறிவிப்பு

தான் இயக்கும் அடுத்த படமாக 'ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி' இருக்கும் என்று இயக்குநர் கரண் ஜோஹர் அறிவித்துள்ளார்.

கடைசியாக 2016ஆம் ஆண்டு, 'ஏ தில் ஹாய் முஷ்கில்' என்கிற படத்தை கரண் ஜோஹர் இயக்கினார். இதன் பிறகு 'லஸ்ட் ஸ்டோரீஸ்', 'கோஸ்ட் ஸ்டோரீஸ்' ஆகிய நெட்ஃபிளிக்ஸ் ஆந்தாலஜி படங்களில் பங்காற்றியிருந்தார். இதன் பிறகு ’தக்த்’ என்கிற பிரம்மாண்டப் படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பை மட்டும் கரண் ஜோஹர் வெளியிட்டார்.

இந்நிலையில் குறுகிய கால இயக்கம் மற்றும் தயாரிப்பாக இந்தப் படத்தை கரண் ஜோஹர் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில், ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்கின்றனர். மேலும், ஜெயா பச்சன், ஷபனா ஆஸ்மி, தர்மேந்திரா உள்ளிட்டோரும் இதில் நடிக்கின்றனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) ரன்வீரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தச் செய்தியை கரண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.

"எனக்குப் பிடித்தமானவர்களை வைத்து மீண்டும் திரைப்படம் இயக்குவது உற்சாகத்தைத் தருகிறது. இதோ 'ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி' படம் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில்" என்று கரண் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றிப் பகிர்ந்திருக்கும் ரன்வீர் சிங், "எனது விசேஷ நாளில் ஒரு விசேஷமான அறிவிப்பு. உங்களை வசீகரிக்க 2022ஆம் ஆண்டு திரைக்கு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஷிதா மொய்த்ரா, சஷாங் கைதான் மற்றும் சுமித் ராய் ஆகியோர் இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதுகின்றனர். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரையும் கரண் வெளியிட்டுள்ளார்.

கரண் ஜோஹர் 'சூர்ய வன்ஷி', 'பிரம்மாஸ்திரா' ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்' படத்தையும் இணைந்து தயாரித்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x