Published : 05 Jul 2021 01:19 PM
Last Updated : 05 Jul 2021 01:19 PM

செப்டம்பரில் தொடங்கும் ஷங்கர் - ராம்சரண் பட ஷூட்டிங்

சென்னை

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளது.

'இந்தியன் 2' படத்தை முடிக்காமல், இதர படங்களைத் தொடங்கக் கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்று லைகா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஷங்கருக்குத் தடைவிதிக்க மறுத்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்த இயக்குநர் ஷங்கர், தனது அடுத்த படத்தின் பணிகளில் மும்முரமாகத் தொடங்கிவிட்டார். அடுத்ததாக தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார். இதில் ராம்சரண் நாயகனாக நடிக்கவுள்ளார்.

நேற்று (ஜூலை 4) சென்னையில் இயக்குநர் ஷங்கர், ராம்சரண், தில் ராஜு ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது படத்தின் முதற்கட்டப் பணிகள், படப்பிடிப்பு தொடக்கம், எத்தனை நாட்கள் படப்பிடிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதில் செப்டம்பர் மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் பூஜையை பிரம்மாண்டமாக நடத்த தில் ராஜு முடிவு செய்துள்ளார். ஏனென்றால், இது தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்சரண் படத்தை முடித்துவிட்டு, இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் 'அந்நியன்' ரீமேக்கைத் தொடங்கவுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x