Published : 03 Jul 2021 04:53 PM
Last Updated : 03 Jul 2021 04:53 PM

எனக்கும் பாவ்யாவுக்கும் திருமணம் நடைபெறாது; பிரிகிறோம்: மெஹ்ரீன் திடீர் அறிவிப்பு

ஹைதராபாத்

பாவ்யா பிஷ்னோய் - மெஹ்ரீன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் நின்றுபோனது. எனக்கும் பாவ்யாவுக்கும் திருமணம் நடைபெறாது என்று மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்தவர் மெஹ்ரீன். தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். பின்பு 'நோட்டா', 'பட்டாஸ்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார்.

இவருக்கும் பாவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் மார்ச் 12-ம் தேதி ஜெய்ப்பூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஹரியாணாவுக்கு மூன்று முறை முதல்வராக இருந்த பஜன் லாலின் பேரன்தான் பாவ்யா பிஷ்னோய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாவ்யா பிஷ்னோய் - மெஹ்ரீன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாவ்யா பிஷ்னோயைத் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் மெஹ்ரீன்.

இது தொடர்பாக மெஹ்ரீன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நானும் பாவ்யாவும் பிரிகிறோம். எங்களுக்கு நடந்த நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படுகிறது. எங்கள் திருமணம் நடைபெறாது. இந்த முடிவை நாங்கள் இருவரும் இணைந்தே எடுத்துள்ளோம். இருவரின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு என் இதயத்தில் இன்னும் மரியாதை இருக்கிறது. ஆனால், இனி பாவ்யாவுடன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எவ்விதத் தொடர்பும் இருக்காது. பாவ்யா தொடர்பாக இந்த ஒரே ஒரு அறிக்கையை மட்டுமே நான் வெளியிடுகிறேன்.

எனது தனிப்பட்ட சுதந்திரத்தை மதித்து நடப்பீர்கள் என நான் நம்புகிறேன். நான் என் வழக்கமான பணிகளைத் தொடர்வேன். எதிர்காலத்தில் சிறப்பாக வேலை செய்யக் காத்திருக்கிறேன்''.

இவ்வாறு மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x