Published : 24 Jun 2021 06:21 PM
Last Updated : 24 Jun 2021 06:21 PM

’பெல் பாட்டம்’ ஓடிடி வெளியீடு: மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் அதிருப்தி

அக்‌ஷய் குமாரின் ’பெல் பாட்டம்’ திரைப்படம் திரையரங்கில் வெளியான 2 வாரங்களில் ஓடிடியில் வெளியாகும் என்று செய்திகள் வந்ததைத் தொடர்ந்து, மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் 'பெல் பாட்டம்'. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரோனா முதல் அலையின்போது லண்டனில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியது படக்குழு.

இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, நிகில் அத்வானி எனப் பலரும் இணைந்து தயாரித்துள்ளனர். அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டாலும், திரையரங்குகளைத் திறப்பதில் தாமதமாவதால் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.

அமேசான் நிறுவனம் இந்தப் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது. ஆனால், தற்போது ஜூலையில் திரையரங்குகள் திறப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதால் 'பெல் பாட்டம்' படக்குழுவினர் முடிவை மாற்றியுள்ளனர். ஜூலை 27-ம் தேதி 'பெல் பாட்டம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் திரையரங்கில் வெளியான இரண்டு வாரங்களில் ஓடிடியில் படத்தை வெளியிடலாமா என்று தயாரிப்பாளர்கள் பரிசீலித்து வருகின்றனர். ஆனால், இந்த திட்டத்தைக் கைவிடச் சொல்லி மல்டிபிளக்ஸ் தரப்பு கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

கரோனா நெருக்கடியில் ஏற்கெனவே திரையரங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு பெரிய நட்சத்திரத்தின் படத்தைக் காண ரசிகர்கள் திரையரங்குக்கு வருவார்கள். ஆனால், இரண்டே வாரங்களில் படம் ஓடிடியில் வெளியாகும் என்று தெரிந்தால் எப்படி மக்கள் படம் பார்க்க வருவார்கள் என்று மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

எனவே, 2 வாரங்கள் அல்லது 20 நாட்களுக்குள் ஓடிடி வெளியீடு என்கிற திட்டத்தை மல்டிபிளக்ஸ் தரப்பு எதிர்த்துள்ளது. குறைந்தது ஒரு மாதமாவது இந்த இடைவெளி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்குத் தயாரிப்புத் தரப்பு இணங்கவில்லை என்றால் தேசிய அளவில் பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் எதிலும் 'பெல் பாட்டம்' வெளியாகாது என்று தெரிகிறது.

மேலும் ’பெல் பாட்டம்’ இப்படிக் குறைந்த கால இடைவெளியில் ஓடிடியில் வெளியானால் இதே முறையை அடுத்து வரும் படங்களும் பின்பற்றும். இதனால் திரையரங்குகள் தொடர் வருவாய் இழப்பையே சந்திக்கும் என்று மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

இன்னும் இதுகுறித்த இறுதி முடிவை ’பெல் பாட்டம் படக்குழு’ எடுக்கவில்லை. தயாரிப்பாளர்களின் இந்த முடிவுக்கு தனித் திரையரங்குகளின் நிர்வாகிகள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x