Published : 15 Jun 2021 06:49 PM
Last Updated : 15 Jun 2021 06:49 PM

'ஜகமே தந்திரம்' இசைக்கு தனுஷ்தான் வழிகாட்டி: சந்தோஷ் நாராயணன்

'ஜகமே தந்திரம்' இசைக்கு தனுஷ்தான் வழிகாட்டி என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தற்போது பல்வேறு வழிகளில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில், 'ஜகமே தந்திரம்' படத்தின் பாடல்களுக்கு தனுஷின் உந்துதல் ஒரு காரணம் என்றும் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சந்தோஷ் நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நான் எப்போதும் தனுஷிடம் நீங்கள் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசைக் கலைஞர்களில் ஒருவர் எனக் கூறுவேன். அதிலும் மிகச் சிறந்தவர்களில் முதன்மையானவர் என்றே சொல்வேன். அவர் ஒரே நேரத்தில் முற்றிலும் வித்தியாசமான படங்களைச் செய்கிறார். அவர் எழுதவும் செய்கிறார். ரவுடி பேபி போன்ற பாடல்களைப் படைக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில், இன்றைய தலைமுறையினர் என்ன விரும்புகிறார்கள் என்பது தனுஷுக்கு அத்துப்படியாகத் தெரிந்திருக்கிறது. இப்படத்தின் பாடல்களை அவருக்கு அனுப்புவேன். பல வெற்றிகளைத் தந்திருந்தாலும் இப்படத்திற்கு எது தேவையோ அதைச் சரியாகச் சொல்வார். இப்படத்தின் இசைக்கு அவர்தான் வழிகாட்டி. அதை அவர் கண்டிப்பாக மறுப்பார். ஆனாலும், தனுஷ்தான் இப்படத்தின் இசைக்கு உந்துதல்".

இவ்வாறு சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x