Published : 11 Jun 2021 09:41 AM
Last Updated : 11 Jun 2021 09:41 AM

சுஷாந்த் பயோபிக் படத்துக்குத் தடை கோரி வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி 

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படத்துக்குத் தடை கோரிய வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலாலும்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாலிவுட் பிரபலங்களுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பலரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே சென்று அவர்களை நேரடியாகச் சாடி வந்தனர். இதனால் பல்வேறு பிரபலங்கள் சமூக வலைதளங்களை விட்டு விலகும் நிலை ஏற்பட்டது.

தற்போது வரை சமூக வலைதளங்களில் சுஷாந்த் தற்கொலை குறித்து விரைவான விசாரணை வேண்டும் என்று அவரது ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘நியாய்: தி ஜஸ்டிஸ்’. இப்படத்தை திலிப் குலாடி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி சுஷாந்த்தின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் நரூலா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் தெளிவற்றவையாக உள்ளதாகவும், இதில் எவ்வாறு உரிமை மீறப்படுகிறது என்பதைக் காண்பிப்பதற்கு எந்தவொரு திட்டவட்டமான உதாரணமும் வாதியால் முன்வைக்கப்படவில்லை என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

‘நியாய்: தி ஜஸ்டிஸ்’ திரைப்படம் இன்று ஆன்லைனில் வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x