Published : 10 Jun 2021 05:13 PM
Last Updated : 10 Jun 2021 05:13 PM

'பாகுபலி' பாணியில் மற்றொரு படம்: மீண்டும் இணையும் பிரபாஸ் - பிரசாந்த் நீல்?

ஹைதராபாத்

'பாகுபலி' பாணியில் புதிய படமொன்றில் இணைய பிரபாஸ் - பிரசாந்த் நீல் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

'கே.ஜி.எஃப்' படத்தின் முதல் பாகத்தின் வெற்றியால், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். 'கே.ஜி.எஃப்' 2-ம் பாகத்தின் பணிகளை முடித்துவிட்டு, பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'பாகுபலி' பாணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இணைய பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டனி பேச்சுவார்த்தையில் இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'கே.ஜி.எஃப்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் - பிரசாந்த் நீல் இருவருமே இந்த வரலாற்றுப் பின்னணி கொண்ட படத்துக்குத்தான் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை தில் ராஜு தயாரிக்க முன்வந்துள்ளார்.

ஆனால், 'பாகுபலி' படம் நீண்ட வருடங்கள் எடுத்துக்கொண்டதால் இப்போதைக்கு இந்தப் படம் வேண்டாம் என்று முடிவெடுத்தார் பிரபாஸ். அதற்கு முன்னதாக ஒரு படம் பண்ணலாம் என்றவுடன்தான் 'சலார்' கதையை பிரபாஸுக்காக எழுதினார் பிரசாந்த் நீல். இதன் படப்பிடிப்பில் ஏற்பட்ட நட்பால், மீண்டும் முதலில் சொன்ன வரலாற்றுப் பின்னணியிலான கதை தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'ராதே ஷ்யாம்', அவரது 20-வது படமாகும். அதனைத் தொடர்ந்து 'சலார்', 'ஆதிபுருஷ்', நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் வரலாற்றுப் பின்னணியிலான படத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார் பிரபாஸ்.

அதாவது பிரபாஸின் 25-வது படமாக இது உருவாகவுள்ளது. தில் ராஜு - பிரபாஸ் - பிரசாந்த் நீல் கூட்டணி உறுதியாகியுள்ளது. தில் ராஜுவுக்கு இது வெள்ளிவிழா ஆண்டு என்பதால், பிரபாஸ் படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x