Published : 08 Jun 2021 06:17 PM
Last Updated : 08 Jun 2021 06:17 PM

ரஜினி எழுந்து நின்று கைதட்டிய சம்பவம்: மாளவிகா மோகனன் பகிர்வு

சென்னை

ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், மாளவிகா மோகனன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

'பேட்ட' படத்தின் மூலமாகவே தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்தே விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷுக்கு நாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது மாளவிகா மோகனன் அளித்த பேட்டியொன்றில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்துப் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

”நான் மும்பையில் வளர்ந்த காலத்திலேயே ரஜினிதான் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் என்று அங்கிருப்பவர்களே பேசுவார்கள். அவரோடு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது சீக்கிரமே 'பேட்ட' மூலம் நடந்துவிட்டது. முதலில் டேஹ்ராடூன் படப்பிடிப்பில்தான் அவரைச் சந்தித்தேன்.

இப்படி நான் யாரைப் பற்றியும் விவரித்ததில்லை, ஆனால், அவர் இருந்த இடமே தெய்வீகமாக, அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் இருந்ததைப் போல அந்த அறையே அப்படி ஒரு உணர்வைத் தந்தது. படத்தில் நான் நீளமாகப் பேசவேண்டிய வசனம் ஒன்று இருந்தது. எனக்குத் தமிழ் தாய்மொழி இல்லை என்பதால் எப்படியும் பல டேக்குகள் வாங்குவேன் என்று தயார் செய்து வைத்திருந்தார்கள்.

ஆனால், நான் அந்த வசனத்தை ஒரு மாதம் முன்பே மனப்பாடம் செய்திருந்ததால் ஒரே டேக்கில் நடித்து முடித்துவிட்டேன். ரஜினி சாரே எழுந்து நின்று கை தட்டினார். அதன் பிறகு அவர் என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்தார். 'மாஸ்டர்' பார்த்துவிட்டு என்னை அழைத்து வாழ்த்தினார்".

இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x