Published : 08 Jun 2021 04:29 PM
Last Updated : 08 Jun 2021 04:29 PM

தன்னைப் போலப் பேசி ஏமாற்றியவரை மன்னித்த நடிகர் ப்ரித்விராஜ்

தன் பெயரில் போலியாக சமூக ஊடகத்தில் பேசிய நபரை நடிகர் பிரித்விராஜ் மன்னித்து ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் திரை பிரபலங்களின் பெயரில் போலியாகப் பக்கம் தொடங்குவது வெகுநாட்களாக நடந்து வருகிறது. அப்படி சமீபத்தில் க்ளப்ஹவுஸ் என்கிற புதிய சமூக வலைதளத்தில், நடிகர் ப்ரித்விராஜ் பெயரில் போலியாக ஒரு பக்கத்தைத் தொடங்கினார் இளைஞர் ஒருவர்.

பயனர்கள் அனைவரும் ஒரு குழுவாகச் சேர்ந்து, பேசி உரையாடும் தளம் இது. இதில் அந்த இளைஞர், ப்ரித்விராஜ் போலவே மிமிக்ரி செய்து, பலரை நம்பவைத்துப் பேசியிருக்கிறார். நடிகர் ப்ரித்விராஜ் அது தன்னுடைய குரல் அல்ல, தான் அந்தத் தளத்தில் இல்லை என்று தெரிவித்ததோடு போலி முகவரியைத் தொடங்கிய இளைஞர் சூரஜின் சுய விவரப் பக்கத்தையும் பகிர்ந்து, இது பெரிய குற்றம் என்று குறிப்பிட்டிருந்தார். ப்ரித்விராஜ் சொன்ன பிறகே பலருக்கும் அது போலியான நபர் என்று தெரியவந்துள்ளது.

இதன் பிறகு சூரஜ் என்ற அந்த இளைஞர், ப்ரித்விராஜைத் தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து ப்ரித்விராஜ் பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

"அன்பார்ந்த சூரஜ், பரவாயில்லை. இதெல்லாம் விளையாட்டாக நீங்கள் செய்தது என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், இதுபோன்ற விஷயங்களுக்கு மிகத் தீவிரமான விளைவுகளும் நேர்ம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 2500க்கும் அதிகமான மக்கள் நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். அதில் பலர் நான்தான் பேசுவதாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பல அழைப்புகள், குறுஞ்செய்திகள், வெளிநாட்டிலிருந்து கூட வர ஆரம்பித்தன. அதனால் இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீங்கள் செய்தது தவறு என்று நீங்கள் ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி.

மிமிக்ரி அற்புதமான ஒரு கலை. மலையாளத் திரையுலகின் சிறந்த நடிகர்கள் பலர் தங்கள் மிமிக்ரி திறமை மூலமே திரைத்துறைக்குள் நுழைந்தது உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். பெரிதாகக் கனவு காணுங்கள், கடுமையாக உழைத்திடுங்கள், கற்பதை நிறுத்தாதீர்கள். உங்களுக்கு வெற்றிகரமான தொழில் வாழ்க்கை அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

பின்குறிப்பு; எனது நல விரும்பிகளுக்கும், மற்றவர்களுக்கும். இணையத்தில் தவறாகப் பேசுபவர்களை நான் மன்னிக்க மாட்டேன். எனவே தயவுசெய்து நிறுத்துங்கள். மீண்டும் சொல்லிக் கொள்கிறேன், நான் க்ளப்ஹவுஸ் தளத்தில் இல்லை" என்று ப்ரித்விராஜ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x