Published : 07 Jun 2021 06:52 PM
Last Updated : 07 Jun 2021 06:52 PM

நான் இன்னொரு படம் எடுக்கக் கூடாது என்று நினைக்கிறேன்: விலகல் எண்ணம் குறித்து க்வெண்டின் டாரண்டினோ பேட்டி

வீடியோ கேசட் கடையில் பணியாற்றி, சினிமாவின் மீதிருக்கும் ஆர்வத்தால் பல்ப் ஃபிக்‌ஷன் திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு வந்து உலக ரசிகர்களின் கவனத்தையே ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் டாரண்டினோ.

ஆனால், கடந்த சில வருடங்களாகவே, கச்சிதமான 10 படங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றும், வயதான காலம் வரையெல்லாம் தனக்குப் படம் இயக்குவதில் விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். அவர் கணக்கின்படி தற்போது 9 படங்களை இயக்கியுள்ளார்.

ஆனால், 10-வது கச்சிதமான படத்தை இயக்குவது சந்தேகம்தான் என்கிற ரீதியில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

"பெரும்பாலான இயக்குநர்களின் கடைசிக் காலத் திரைப்படங்கள் மோசமாக இருந்திருக்கின்றன. அல்லது மோசமான படங்களே அவர்களின் கடைசிப் படங்களாக இருக்கின்றன. ஹாலிவுட்டின் பொற்காலத்தில் இருந்த பெரும்பான்மை இயக்குநர்களுக்கே அந்த நிலைதான். அவர்களின் கடைசிப் படங்களை 60களின் இறுதியில், 70களின் ஆரம்பத்தில் எடுத்தார்கள்.

அதன் பின் 80, 90களில் வந்த இயக்குநர்களுக்கும் அதேதான் நடந்தது. எனவே ஒரு நல்ல படத்தோடு இயக்கத்தை நிறுத்துவது என்பது அரிய விஷயம். அப்படிச் சிறப்பான ஒரு படத்தோடு நமது பணியை முடிப்பது அற்புதமான விஷயமாக இருக்கும். எனவே, நான் இன்னொரு படம் எடுக்கக் கூடாது என்று நினைக்கிறேன். இப்போதே விலகுவதில் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்" என்று டாரண்டினோ கூறியுள்ளார்.

பிரபல திகில் பட இயக்குநர் ஹிட்ச்காக் பல்வேறு சிறப்பான, வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் திரைப்படங்களை இயக்கினாலும் அவர் இயக்கத்திலிருந்து விலகுவதற்கு முன் எடுத்த படங்கள் மோசமான விமர்சனங்களையே சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டான்லி டானென், ஹாவர்ட் ஹாக்ஸ் என அந்தக் கால ஹாலிவுட் இயக்குநர்கள் பலருக்கும் இதே பிரச்சினை ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x