Published : 07 Jun 2021 04:44 PM
Last Updated : 07 Jun 2021 04:44 PM

நடிகர் திலீப் குமார் நலமாக இருக்கிறார்; சில நாட்களில் வீடு திரும்புவார்: குடும்பத்தினர் தகவல்

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் மூத்த நடிகர் திலீப் குமார் நலமாக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று, மூச்சுத் திணறல் காரணமாக 98 வயதான நடிகர் திலீப் குமார் மும்பையின் கர் பகுதியில் இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது கோவிட் அல்லாத வழக்கமான நோயாளிகளுக்கான மருத்துவமனையாகத் தற்போது செயல்பட்டு வருகிறது. நுரையீரல் பகுதியில் திரவம் அதிகமாகச் சேர்ந்ததால் திலீப் குமாருக்கு இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

ஆக்சிஜன் உதவி கொடுக்கப்பட்டிருப்பதாகவும், வென்டிலேட்டரில் இல்லை என்றும், அவர் திடமாக இருப்பதாகவும் திலீப் குமாரின் ட்விட்டர் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்திருந்தனர். மேலும் சில பரிசோதனை முடிவுகள் வரக் காத்திருப்பதாகவும், 2-3 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

பின்னர், உண்மையான அறிக்கைகளை மட்டுமே ஊடகங்கள் செய்தியாக்க வேண்டும் என்றும், வேறெந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் இன்னொரு ட்வீட் பகிரப்பட்டது.

ஊடகத்தினரிடம் பேசிய திலீப் குமாரின் மனைவி சாய்ரா பானு, "அவருக்கு திடீரென ஏன் மூச்சுத் திணறல் வந்தது, ஜுரம் வந்தது என்பதைக் கண்டறிய பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாகவே அவரின் உடல்நிலை சரியில்லை. எனவே, அவரை மருத்துவமனையில் சேர்த்தோம். நீங்கள் அனைவரும் அவர் குணமடையப் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் இதே மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்கு திலீப் குமார் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x